கலைத் திருவிழா போட்டிகள் 2022
பள்ளிக் கல்வித் துறையில் முதல் முறையாக அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
அரசு பள்ளி மாணவர்களுக்கு...!
மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக் கொணரும் வகையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்படும் என சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.
இதை செயல்படுத்தும் வகையில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், 6 முதல் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
இந்த கலைத் திருவிழா 6 முதல் 8 வகுப்பு வரை, 9 மற்றும் 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் என மூன்று பிரிவுகளில் நடைபெறும்.
பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களை வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்களை மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
கலையரசன், கலையரசி விருதுகள்
மாநில அளவிலான கலைத் திருவிழா இறுதி போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும், "கலையரசன்', "கலையரசி' என்ற விருதுகளும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு மாணவர்களின் கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும்.
நவம்பர் 23 முதல் துவக்கம்
மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். பள்ளி அளவில் நவ.23 முதல் நவ.28 ஆம் தேதி வரையிலும், வட்டார அளவில் நவ.29 முதல் டிச.5 ஆம் தேதி வரையிலும், மாவட்ட அளவில் டிச.6 முதல் டிச.10 ஆம் தேதி வரையிலும், மாநில அளவில் ஜன.3 முதல் ஜன.9}ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட வேண்டும்.
போட்டிகள் என்னென்ன?
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கலைத்திருவிழா போட்டிகளில் பெருமளவு மாணவர்களின் பங்கேற்பினை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இந்த கலைத் திருவிழாவில் ஓவியம், அழகு கையெழுத்து, களிமண் சுதை வேலைப்பாடு, செதுக்குச் சிற்பம், இசை, நடனம், நாடகம், பலகுரல் பேச்சு, கதை எழுதுதல், கவிதை புனைதல், பேச்சுப் போட்டி (தமிழ், ஆங்கிலம்), திருக்குறள் ஒப்பித்தல், கதை சொல்லுதல், கட்டுரைப் போட்டி (தமிழ், ஆங்கிலம்), பட்டிமன்றம் ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
போட்டிகளை நடத்துவது குறித்த வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த போட்டிகளை நடத்துவதற்காக, ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்ககம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளன.