சென்னை: தமிழகத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் பற்றிய கணக்கெடுக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஏப்ரல் மாதம் கணக்கெடுப்பு பணி தொடங்குகிறது.
தமிழகத்தில் 23928 ஆரம்ப பள்ளிகள், 7260 நடுநிலைப் பள்ளிகள், 3044 உயர்நிலைப் பள்ளிகள், 2727 மேனிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இது தவிர அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள்(அனைத்து வகை) 8407 பள்ளிகள் இயங்கி வருகின்றன. சுயநிதி பள்ளிகள் என 11462 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
மேற்கண்டவற்றில் அரசுப் பள்ளிகளில் மட்டும் 56 லட்சத்து 55 ஆயிரத்து 628 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். ஆரம்ப பள்ளிகளில் மட்டும் 14 லட்சத்து 87 ஆயிரத்து 031 குழந்தைகள் படித்து வருவதாக அரசு புள்ளிவிவரம் கூறுகிறது. ஆரம்ப பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் 18 லட்சம் என்ற அளவில் இருந்தது. தற்போது அது 14 லட்சம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.
பள்ளிகளில் அதிக அளவில் குழைந்தைகளை சேர்க்க வேண்டும் என்று நோக்கில் 14 வகையான இலவச பொருட்களை அரசு வழங்கி வருகிறது. ஆனாலும் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படுவது ஆண்டுக்கு ஆண்டு குறைந்தே வருகிறது. இது தவிர குழந்தைகளுக்கான பாலவாடிப் பள்ளிகள், மதிய உணவு திட்டம் போன்றவையும் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் மதிய உணவுக்கு பிறகு பல குழந்தைகள் பள்ளிக்கு வருவதில்லை.
பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளில் பல்வேறு காரணங்களால் இடை நின்று விடுவதும் உண்டு. கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் ஒன்றரை லட்சம் குழந்தைகள் பள்ளியில் இருந்து இடைநின்றுவிட்டதாக அனைவருக்கும் கல்வி இயக்கம் புள்ளி விவரம் தயாரித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பியது. மாநில வாரியாக இது போன்ற பட்டியல்களை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஜனவரியில் வெளியிட்டது.
இந்நிலையில், 6 வயது முதல் 14 வயது உள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி அளிக்க வேண்டும் என்று கடந்த 2009ம் ஆண்டில் மத்திய அரசு சட்டம் இயற்றியது. அதன்படி ஒவ்வொரு மாநிலமும் இலவச கட்டாய கல்வி வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கடந்த 2010ம் ஆண்டு முதல் எடுத்து வருகிறது. ஆனால், அந்த சட்டத்தில் கூறப்பட்டு எந்த அம்சங்களையும் தமிழக அரசு முறையாக செய்யவில்லை என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றரன.
பல்வேறு குழப்பங்களுக்கு இடையில் பள்ளிக் கல்வி என்பது குழந்தைகளை அச்சுறுத்துவதாக இருப்பதால் பள்ளிக்கு குழந்தைகள் வர மறுக்கின்றனர் என்றும் கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையடுத்து, பள்ளி செல்லாக் குழந்தைகள் குறித்த விவரங்களை கணக்கெடுக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது. இதன்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் மே மாதம் முடிய புள்ளிவிவரம் சேகரிக்கும் பணி நடக்கும். 6 வயது முதல் 14 வரையில் உள்ள பள்ளி செல்லாக் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், ஆகியோர் கண்டுபிடிக்கப்படுவார்கள். கணக்கெடுப்பு பணியில் அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், அங்கன்வாடி அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாவட்ட தொழிலாளர் அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் ஈடுபட உள்ளனர்.
கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி 80 ஆயிரம் குழந்தைகள் பள்ளி செல்லா குழந்தைகளாக கண்டறியப்பட்டனர். ஆனால் அவர்களை பள்ளியில் சேர்த்தார்களா என்பதற்கான விவரங்களை அரசு தரப்பில் வெளியிடவில்லை.