ஊரடங்கின் காரணமாக கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொறியியல் மாணவர்களை மகிழ்விக்கும் வகையில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை நடத்த உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ள சம்பவம் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு
கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரி என அனைத்து வகை கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும், மீண்டும் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற எவ்வித அறிவிப்பும் வெளிவராமல் மர்மமான நிலையே நீடித்து வருகிறது.
தேர்வுகள் ஒத்திவைப்பு
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, கல்வி நிறுவனங்களைத் திறக்கமுடியாத சூழல் நிலவி வரும் இந்த சூழ்நிலையில், பெரும்பாலான கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்தும் அறிவித்துள்ளது.
பொறியியல் தேர்வுகள்
இதனிடையே, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை ரத்து செய்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், பொறியியல் கல்லூரி தேர்வுகள் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளிவராமல் இருந்த நிலையில், தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் என பொறியியல் பல்கலைக் கழகம் அறிவித்திருந்தன.
கலை அறிவியல் தேர்வுகள் ரத்து
தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயிலும் மாணாக்கர்கள், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பலவகை தொழில் நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் பருவத்தேர்வு நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக் குழு ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டது.
யார் யாருக்கு தேர்வுகள் இல்லை
அதனைத் தொடர்ந்து, அந்தக் குழுவின் பரிந்துரையின் படி முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கும் மற்றும் பலவகை தொழில்நுட்பப் பட்டயப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்குத் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரியர் மாணவர்களின் அரசனே
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவத் தேர்வுகளில் அரியர் வைத்து அதற்கான கட்டணம் செலுத்தியுள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத சூழ்நிலையால், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மீண்டும் செமஸ்டர் தேர்வு
இந்நிலையில், முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளதால் மாணவர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகங்கள் விரும்பினால் யுஜிசி-யின் தேர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு முதலாம், இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.