சென்னை: நாட்டிலுள்ள 41 பல்கலைக்கழகங்களுக்கு நிகர்நிலை அந்தஸ்தை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சிலுக்கு (NAAC) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என அந்தஸ்து பெற்ற 41 பல்கலைக்கழகங்களில் என்ஏஏசி மதிப்பீடு செய்தது. அப்போது அந்த 41 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில், என்ஏஏசி வரையறைத்துள்ள பல விதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று தெரியவந்தது.
இதுதொடர்பாக அந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு என்ஏஏசி நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அந்த பல்கலை.கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி. பந்த் ஆகியோரது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்த பல்கலைக்கழகங்களுக்கு நிகர்நிலை அந்தஸ்தை வழங்க தற்போது உத்தரவிட்டுள்ளனர்.
அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) 2010-ல் உருவாக்கிய விதிமுறைகளைக் கொண்டு அந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை என்ஏஏசி கட்டுப்படுத்தக் கூடாது. அந்த பல்கலைக்கழகங்களுக்கு உரிய நிகர்நிலை அந்தஸ்தை என்ஏஏசி வழங்கவேண்டும்.
அதே வேளையில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அடுத்த 10 நாட்களுக்குள் என்ஏஏசி-யிடில் சுய மதிப்பீட்டு அறிக்கையை அளிக்கவேண்டும். அதன் பிறகு என்ஏஏசி அவற்றை மதிப்பீடு செய்து நிகர்நிலை அந்தஸ்து அளிக்கப்படும். என்ஏஏசி எடுக்கும் முடிவுகள், உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் முடிவின்படியே இருக்கவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.