டெல்லி: சிபிஎஸ்இ நடத்திய அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் முறைகேடு புகார் எழுந்ததால், மீண்டும் அந்தத் தேர்வை நடத்த உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மத்திய பள்ளி கல்வி வாரியத்தின் சார்பில் (சி.பி.எஸ்.இ.) ஆண்டு தோறும் அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி, பல்மருத்துவ கல்லூரிகளில் முறையே எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர இந்த நுழைவுத் தேர்வின் மூலம் 15 சதவீதம் மாணவர்கள் இட ஒதுக்கீடு பெறுகின்றனர்.
இந்த ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 3-ந் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 6 லட்சத்து 30 ஆயிரம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள். கடந்த 5-ந் தேதி இதன் முடிவு வெளியாக இருந்தது.
இதற்கிடையே ஹரியானா மாநிலத்தில், தேர்வு தொடங்கும் முன்பாகவே 44 மாணவர்கள் கேள்வித் தாள்களை முறைகேடாகப் பெற்று தேர்வை எழுதியதாக சில மாணவர்கள் மற்றும் பெற்றோர் சார்பில் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அரியானா போலீசார் விசாரணை நடத்தி 12 பேரை கைது செய்தனர்.
நுழைவுத் தேர்வில் ஹரியானா, பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 700-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள், முறைகேடு மூலம் சட்டவிரோதமாக பலன் அடைந்து இருப்பார்கள் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் போலியான முகவரி மூலம் 72 செல்போன் இணைப்புகளை பெற்று, 102 கேள்விகளுக்கான பதில்கள் அந்த மாணவ-மாணவிகளுக்கு அனுப்பப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
வழக்கு
இதற்கிடையே, முறைகேடு நடைபெற்றதால் மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து விட்டு, மீண்டும் தேர்வு நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரி தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 3-ந் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரபுல்ல சி.பந்த், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய விடுமுறைகால அமர்வு, நுழைவுத் தேர்வை நடத்திய மத்திய பள்ளி கல்வி வாரியம் தேர்வு முடிவுகளை வெளியிட 12-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கடந்த மே 3-ந் தேதி நடைபெற்ற மருத்துவ கல்லூரி நுழைவுத் தேர்வை ரத்து செய்தும், மீண்டும் 4 வாரங்களுக்குள் மறு தேர்வை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "தேர்வை நடத்திய மத்திய பள்ளி கல்வி வாரியம் போதிய கவனம் எடுத்து சரியான முறையில் ஏன் தேர்வை நடத்தவில்லை? இதே போன்ற முறைகேடு சென்ற ஆண்டும் நடைபெற்றது.
இதுபோன்ற முறைகேடுகள் குறித்து உங்களுக்கு நன்றாக தெரியும். அப்படி இருந்தும் ஏன் போதிய கவனம் செலுத்தவில்லை? இந்த தேர்வின் புனிதத்தன்மை கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. எனவே ஏற்கனவே நடைபெற்ற மருத்துவ படிப்பு மற்றும் பல்மருத்துவ படிப்புக் கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் மறுதேர்வு நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
இதனை இன்றிலிருந்து நான்கு வாரங்களுக்குள் நடத்தி முடிக்குமாறு உத்தரவிடுகிறோம்," என்று குறிப்பிட்டுள்ளனர்.