பீகார், சுகாதாரத்துறையில் இளநிலை பொறியாளர் பதவிக்காக விண்ணப்பித்தவர்களை, தகுதி அடிப்படையில் வரிசைப்படுத்தி அம்மாநில அரசுத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் நடிகை சன்னி லியோன் பெயர் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார், பொது சுகாதாரக் கட்டமைப்புத் துறையில் காலியாக உள்ள 214 இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்க வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில், சுமார் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, கல்வித் தகுதி மற்றும் துறை சார்ந்த அனுபவத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை வரிசைப் படுத்தி, அரசுத்துறை இணைய தளத்தில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் பெயராக 98.50 புள்ளிகளுடன் நடிகை சன்னி லியோன் பெயர் இடம்பெற்றுள்ளது.
இதைக் குறிப்பிட்டு, சிறப்பான மதிப்பெண்ணை பெற்றிருப்பது மகிழ்ச்சி என தமது ட்விட்டர் பக்கத்தில் சன்னிலியோன் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பேசிய பீகார் அமைச்சர் வினோத் நாராயணன் "இது இணைய தளத்தில் யாரோ விஷமிகள் வேண்டுமென்றே செய்த குறும்பு" எனக் கூறியுள்ளார்.