ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள அரசு இசைப் பள்ளியில் சிறுவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், வரும் 26 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, மாவட்ட அளவிலான இலவச கோடைகாலப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து, சவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலர் மு. லோக சுப்பிரமணியன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " மதுரை மண்டல கலைப் பண்பாட்டு மையமும், ராமநாதபுரம் மாவட்ட சவகர் சிறுவர் மன்றமும் இணைந்து, அரசு இசைப் பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் கோடைகாலத்தை மிகவும் பயனுள்ளதாக செலவிடுவதற்காக, இலவச கோடைகாலப் பயிற்சி முகாமை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.

வரும் 26 ஆம் தேதி தொடங்கும் இந்தப் பயிற்சி முகாமில், சிறார்களுக்கு பரதநாட்டியம், குரலிசை எனப்படும் வாய்ப்பாட்டு, ஓவியம், கைவினை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றான சிலம்பம் ஆகியன கற்றுத் தரப்படுகின்றன.
இதில் கலந்துகொள்ளும் அனைவருக்கும், அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்று நல்ல முறையில் பயிற்சி எடுத்துக்கொண்ட மாணவ, மாணவியரை மேலும் ஊக்குவிப்பதற்காக, கோடை வாசஸ்தலங்களில் ஏதேனும் ஒரு இடத்துக்கு மாநில அளவிலான கோடை காலப் பயிற்சி முகாமுக்கு, அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர்.
இந்த வாய்ப்பினை, பள்ளி மாணவ, மாணவியர் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, மு.லோகசுப்பிரமணியன், திட்ட அலுவலர், சவகர் சிறுவர் மன்றம், ராமநாதபுரம், 98425-67308 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












