தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் முதல் வாரம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், குறிப்பிட்ட சில மாநிலங்களில் மீண்டும் தொற்றின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகள் அதிரடியாக மூடப்பட்டு வருகிறது.
பள்ளி திறப்பு
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது.
ஆன்லைன் வகுப்புகள்
கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்காத வகையில் ஆன்லைன் வழியிலான வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டனர். இதர வகுப்புகளுக்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த ஆண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது.
தேர்வின்றி தேர்ச்சி
தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டும் கொரோனா தொற்று பெரும் அளவில் பரவியதையடுத்து ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். இதர 10, 12ம் வகுப்பு உள்ளிட்ட மாணவர்கள் முந்தைய தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.
மீண்டும் அதிகரித்த கொரோனா
இதனிடையே, சமீப நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மூன்றாம் அலை பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா
குறிப்பாக, செப்டம்பர் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஆங்காங்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு
இந்த நிலையில், சிக்கிம் மாநிலத்தில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஜிபி உபாத்தியாயா கூறுகையில், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப் பட்டது. 50 சதவிகித மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
பெற்றோர்களிடம் ஒப்புதல் கடிதம்
அவ்வாறு, பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டியது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில், பள்ளி மாணவர்கள் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, தெற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு சிக்கிம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அக்.31 வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும்
பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வரும் அக்டோபர் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தொற்று உறுதியான மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு மீண்டும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












