சென்னை: சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பெற இன்று கடைசி நாள் என்பதால் மாணவ, மாணவிகள் இந்த விண்ணப்பங்களைப் பெறுவதற்கு முண்டியடித்தனர்.
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, யோகா- இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 29-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஏராளமான மாணவ, மாணவிகள் இந்த விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி, அரசு யுனானி மருத்துவக் கல்லூரி, அரசு யோகா- இயற்கை மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி, திருமங்கலம் அரசு ஹோமியோபதி கல்லூரி, நாகர்கோவில் அரசு ஆயுர்வேத கல்லூரி ஆகிய ஆறு கல்லூரிகளில் விண்ணப்பங்கள் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாமல், இணையதளத்திலும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.
விண்ணப்பங்களை நேரடியாகப் பெறவும், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஜூலை 24 கடைசித் தேதியாகும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி ஜூலை 31 ஆகும். விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு ரேண்டம் எண், தர வரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் இறுதி வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பங்களை வாங்குவதற்கு இன்று கடைசி நாள் என்பதால் மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளை மொய்த்தனர். விண்ணப்பங்களைப் பெறுவதற்கு அவர்கள் வரிசையில் காத்திருந்தனர்.


Click it and Unblock the Notifications












