சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிக்கூடங்களில் கல்வி உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்தக்கோரி இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் சென்னை டி.பி.ஐ வளாகம் முன்பாக மறியல் போராட்டம் நடந்தது.
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் முன்பு முற்றுகைபோராட்டம் நடத்துவதற்கு இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று முற்றுகையிட்டனர்.

அவர்களை மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகத்திற்கு செல்ல விடாமல் முன்னெச்சரிக்கையாக போலீசார் இரும்பு வேலி போட்டு தடுத்து வைத்திருந்தனர்.
டி.பி.ஐ வளாகத்தின் 3 வாயில்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். டி.பி.ஐ வளாகத்திற்குள் யாரும் செல்ல முடியாதபடி போலீசார் நின்றனர்.
அப்போது அங்கு கொடிகளுடன் வந்த இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்-மாணவிகள் டி.பி.ஐ வளாகத்தின் உள்ளே செல்ல முயன்றனர்.

அவர்களை உள்ளே விடாமல் போலீசார் தடுத்தனர். இருப்பினும் அதே இடத்தில் மாணவ, மாணவிகள் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டம் இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் ஜோ.ராஜ் மோகன் தலைமையில் நடந்தது.
இப்போராட்டம் குறித்து போராட்டக்குழுவினர், "கல்வி கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணத்தை மெட்ரிகுலேசன் பள்ளிகளில் வசூலிக்கிறார்கள். இதனால் பெற்றோர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதை அரசும், மெட்ரிகுலேசன் இயக்குனரகமும் தட்டிக்கேட்டு நியாயமான கட்டணத்தை வசூலிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

மேலும் கல்வி உரிமைச்சட்டம் நடைமுறைக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இச்சட்டம் தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.
இச்சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் சமூக மற்றும் பொருளாதார தளத்தில் நலிந்த குடும்பங்களைச்சேர்ந்த குழந்தைகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்திட வேண்டும்.
ஏற்கனவே கட்டணம் செலுத்தி சேர்க்கப்பட்ட மாணவர்களில் 25 சதவீதத்தை எடுத்து இட ஒதுக்கீடு கொடுத்ததாக பள்ளிக்கூடங்கள் தெரிவிக்கின்றன. மெட்ரிகுலேசன் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நன்கொடை வசூலிப்பதை மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனரகம் தடுக்கவேண்டும்" என்று தெரிவித்தனர்.
மறியல்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது அவர்களுக்கும் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டம் நடத்திய அனைவரும் கைது செய்யப்பட்டனர்.


Click it and Unblock the Notifications












