கொரோனா பெற்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தொழிற்சாலைகள், ஐடி உள்ளிட்ட நிறுவனங்கள் மூடப்பட்டன. தொடர்ந்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தொழில் நிறுவனங்கள் திறந்த போதிலும் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது.
இதனிடையே, அமேசான் உள்ளிட்ட பல பண்ணாட்டு நிறுவனங்கள் ஆயிரக் கணக்கான இளைஞர்களுக்கு அவ்வப்போது வேலை வாய்ப்பினை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் ஒரு கல்வி நிறுவனத்தில் ஒரே நாளில் 8,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ள சம்பவம் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.
வேலையை பறித்த கொரோனா
மேற்கூறியவாறு, ஊரடங்கின் காரணமாகச் சரிவைச் சந்தித்த பல ஐடி நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் பல தொழிலாளர்களை பணியில் இருந்து அதிரடியாக நீக்கியது. பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதிய குறைப்பு, போனஸ் நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது நாம் அறிந்ததே.
பரபரப்பான பல்கலைக் கழகம்
இதனிடையே, பஞ்சாப் மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் பல்கலைக் கழகமான லவ்லி புரோபசனல் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் கேம்பஸ் தேர்வு நடந்தது. இதில், இப்பல்கலையில் படிக்கும் மாணவர்களை நேரடியாக பணிக்கு தேர்வு செய்ய பல பன்னாட்டு நிறுவனங்கள் குவிந்தன.
மாணவர்களை அள்ளிச் சென்ற ஐடி கம்பெனிகள்
அவ்வாறு லவ்லி புரோபசனல் கல்வி நிறுவனத்திற்கு மைக்ரோசாப்ட், கேப்ஜெமினி, இன்போசிஸ், போஸ், டிசிஎஸ், விப்ரோ, ஹாவெல்ஸ், எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ், காக்னிசெண்ட், சவுத் இந்தியன் பேங்க், ஃபெடரல் பேங்க், இன்போர்மெட்டிக்கா, ஆதித்யா பிர்லா குரூப், ஹிட்டாச்சி, அக்கார் குரூப் ஆப் ஹோட்டல்ஸ், அமேசான், டிஎக்ஸ்சி டெக்னாலஜிஸ், சிஸ்கோ, லோவீஸ் இந்தியா, டிவோ கார்பேரஷன், இன்பினான், சீமென்ஸ், அக்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்காக புதிய ஆட்களை தேர்வு செய்ய வந்திருந்தனர்.
8500 மாணவர்களுக்கு வேலை
இந்த தேர்வில் அந்த பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 8,500 பேருக்கு வேலை கிடைத்தது. மொத்தம் 1400 நிறுவனங்கள் தங்களது நிறுவனத்திற்காக ஆட்கள் தேர்வு செய் வந்ததில் இத்தனை பேருக்கு பணிக்கான ஆணையை வழங்கினர். இதில், அதிகபட்ச சம்பளமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆண்டிற்கு 42 லட்சம் சம்பளத்தில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாள், ஒரே பல்கலை
ஒரே நாளில், ஒரே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 8,500 மாணவர்களுக்கு கேம்பஸ் தேர்வின் மூலம் வேலை கிடைத்த சம்பவம் நாடு முழுவதும் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் தற்போது அப்பல்கலைக் கழகம் குறித்து இணையத்தில் தேடத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, தமிழக மாணவர்கள் இந்நிகழ்வு குறித்து சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.