சென்னை: எம்பிபிஎஸ், பொறியியல் படிப்புகளுக்கு அலைமோதும் மாணவர்கள் சமீப ஆண்டுகளாக கலை, அறிவியல் படிப்புகள் மீது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் 2-ஆம் தேதி தொடங்கியது.
விநியோகம்
பிளஸ் 2-வில் அதிக மதிப்பெண் பெறும் சிறந்த மாணவர்களையும் கவரும் வகையில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அரசு கல்லூரிகளிலும் முன்கூட்டியே விண்ணப்ப விநியோகம் நடைபெற்றது.
விண்ணப்பம்
கடந்த ஆண்டைக் காட்டிலும் கல்லூரிகளில் விண்ணப்ப விற்பனை அமோகமாக இருந்தது. கடந்த ஆண்டை விட ஒவ்வொரு கல்லூரியிலும் சுமார் 5 ஆயிரம் விண்ணப்பங்கள் அதிகமாக விற்பனையாயின.
பிளஸ் 2 படிப்பு
பிளஸ் 2 முடித்தாலே பொறியியல் படிப்பில் சேர்வது என்ற நிலை தற்போது அடியோடு மாறியுள்ளது. குறிப்பிட்ட அளவிலேயே மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்கின்றனர்.
அதிகரிப்பு
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கலை, அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இது 2016-17 கல்வியாண்டிலும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி முதல்வர்
நடப்புக் கல்வியாண்டில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்று கல்லூரிகளைச் சேர்ந்த முதல்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசு கல்லூரி
சென்னை காயிதே மில்லத் கல்லூரி முதல்வர் கே.சீதா லட்சுமி இதுகுறித்து கூறியது:
எங்கள் கல்லூரியில் 15 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டுகளை விட கூடுதலாகும்.
படிப்புகளைப் பொருத்தவரை பி.காம்., பி.எஸ்சி. ஊட்டச் சத்து போன்ற படிப்புகளுக்கு மிக அதிகமானோர் விண்ணப்பித்திருக்கின்றனர். 2014-15-ம் ஆண்டில் எங்கள் கல்லூரியில் 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். 2015-16 கல்வியாண்டில் 14,300 பேர் விண்ணப்பித்திருந்தனர் என்றார் அவர்.
ராணி மேரி கல்லூரி
இதேபோல சென்னை ராணி மேரி கல்லூரியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. இந்தக் கல்லூரியிலும் பி.காம். படிப்புக்குத்தான் மிக அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.
மாநிலக் கல்லூரி
சென்னை மாநிலக் கல்லூரியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 2 ஆயிரம் கூடுதலாகும்.
5 ஆயிரம் அதிகம்
அரசுக் கல்லூரிகளில் மட்டுமல்லாமல், பிரபல தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் விண்ணப்ப விநியோகம் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 3,000 முதல் 5,000 அளவுக்கு கூடுதலாக விற்பனையானதாக கல்லூரி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.