தமிழகத்தில் நடப்பு ஆண்டு பொறியியல் கல்லூரிகளை விட மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி, ஒரே நாளில் 89 ஆயிரம் பேர் கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை என்பது ஆர்வமற்ற ஒன்றாக ஆகிவிட்டது. குறிப்பாக, பொறியியல் படிப்புகளுக்கான வேலையின்மை மற்றும் ஆண்டுதோறும் பொறியியல் படிப்பு முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு போதிய வேலை கிடைக்காமல் இருப்பது இதற்கு ஓர் காரணமாக உள்ளது.
தற்போது, தமிழகத்தில் மொத்தம் 109 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ள நிலையில், அவற்றில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் உறுப்புக் கல்லூரிகள் என சுமார் ஒரு 1,71,350 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஜூலை 20ம் தேதியன்று தொடங்கியது.
இதனிடையே, கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையிலும், விண்ணப்பதாரர்களின் நலன் கருதியும் ஆன்லைன் வழியில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர்கல்வித் துறை அறிவித்தது.
அதன்படி, இணைய வழியின் மூலம் ஜூலை 20 முதல் 21ம் தேதி வரையில் 89 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அவற்றில், சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை முழுமையாக விண்ணப்பித்தும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பக்கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர்.
முன்னதாக. கொரோனா பாதிப்பின் காரணமாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் அதன் முடிவுகள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து கலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க ஜூலை 31ம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.