சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவு இன்னும் இரண்டு நாட்களில் வரவிருக்கிறது. மாணவர்களிடையே தொழில் நுட்ப படிப்புகளை விட கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு தற்போது அதிக வரவேற்பு இருக்கிறது.
பிளஸ்-2 தேர்வு முடிவு இன்னும் இரண்டு நாட்களில் வரவிருக்கிறது. மாணவர்களிடையே எந்த படிப்புகளில் சேருவது என்கிற ஒரு சறிய குழப்பம் இருந்து வருகிறது. தொழில் நுட்ப படிப்புகளை விட கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு கடந்த சில வருடங்களாக மவுசு அதிகரித்து வருகிறது. பி.காம், பி.பி.ஏ, பி.ஏ. ஆங்கிலம், பி.சி.ஏ. கம்யூட்டர் அறிவியல், பிஎஸ்சி, வேதியியல், இயற்பியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவ -மாணவிகள் அதிகளவு சேர்ந்து வருகிறார்கள்.
என்ஜீனியரிங் படிப்பிற்காக பெற்றோர்கள் அதிக அளவில் செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. ஆனால் இன்று என்ஜீனியரிங் படித்து விட்டு வேலை இல்லாம்ல் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதால் பெரும்பாலான மாணவர்கள் கலை அறிவியல் படிப்புகளில் சேருவதையே விரும்புகிறார்கள்.
மாணவர்கள் கூட்டம்
மேலும் அதிக காசு செலவு செய்து என்ஜீனியரிங் படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பதைவிட கலை அறிவியல் படிப்பை குறைந்த செலவில் படித்துவிட்டு, போட்டித்தேர்வுகளில் பங்கு பெற்று ஈஸியாக அரசு பணிகளில் அமருவதையே மாணவ மாணவியர்கள் விரும்புகிறார்கள். அதனால் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளை நோக்கி மாணவ மாணவியர்கள் படையெடுத்துச் செல்கிறார்கள்.
விண்ணப்பம் வினியோகம்
தமிழ்நாட்டில் 82 அரசு கலைக்கல்லூரிகள் உள்ளன. 162 அரசு உதவிபெறும் கல்லூரிகளும் 200-க்கும் மேலான சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.தனியார் கலை அறிவியல் கல்லூரியில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பிளஸ்-2 தேர்வு முடிவு 12-ந் தேதி வெளிவருவதால் கடந்த 1-ந் தேதியே பல கல்லூரிகளில் விண்ணப்பம் வினியோகம் தொடங்கிவிட்டன.
அரசு போட்டித் தேர்வு
சென்னையில் லயோலா, எத்திராஜ், கிறிஸ்தவ பெண்கள் கல்லூரி, வைஷ்ணவா கல்லூரி, ஸ்டெல்லா மேரி கல்லூரி, சென்னை கிறிஸ்தவ கல்லூரி (எம்.சி.சி.), உள்ளிட்ட பல கல்லூரிகளில் பி.காம், பி.ஏ. ஆங்கிலம், பி.பி.ஏ. உள்ளிட்ட முக்கிய பாடப்பிரிவுகளில் சேருவதற்கு மாணவ -மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு கலைக் கல்லூரிகளில் ஏழை -எளிய மாணவர்கள் படித்து வருகிறார்கள்.டி.என்.பி.எஸ்.சி, வங்கி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம், ரெயில்வே உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த வேலைவாய்ப்பிற்கும் ஏதாவது ஒரு பட்ட படிப்பு அவசியம் என்பதால் கலை கல்லூரிகளில் கூட்டம் அலை மோதுகிறது. அரசு கலைக்கல்லூரிகளில் கடந்த வாரம் விண்ணப்பம் வினியோகம் தொடங்கி விட்டது.
அதிக இட ஒதுக்கீடு
அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கை தொடங்கிவிட்டது. பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான 10 நாட்களில் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளை போலவே இந்த வருடம் கலைக்கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர் இடையே ஆர்வம் அதிகமாக உள்ளது. அரசு கல்லூரிகளில் அதிகளவு விண்ணப்பம் பெறும் சூழ்நிலையில் கூடுதலாக இடங்கள் ஒதுக்குவது குறித்து முடிவு செய்யப்படும். பி.காம், பி.ஏ, ஆங்கிலம், பி.பி.ஏ. பாடங்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது அதற்கேற்றாற்போல் இடங்கள் ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.