டெல்லி: டெல்லியிலுள்ள சில முக்கிய கல்லூரிகளில் படிப்பதற்காக மாணவ, மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர்.
நாட்டின் தலைநகர் டெல்லியில் சில சிறப்பு வாய்ந்த கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் சேர்க்கைக்காக மாணவ, மாணவிகள் கடும் ஆர்வத்தில் உள்ளனர். அந்தக் கல்லூரிகளில் எப்படியாவது இடம் கிடைத்து சேரவேண்டும் என்ற ஆர்வத்தில் அவர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்தக் கல்லூரிகளில் சேர்வதற்கான பணிகளை டெல்லி பல்கலைக்கழகம் செய்து வருகிறது. டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்-ஆஃப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இம்முறையும், இரண்டு முக்கிய கல்லூரிகளில் இளநிலை கணினி அறிவியல் படிப்புக்காக 100 சதவீத மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2015-16 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. மொத்தம் உள்ள 54,000 இடங்களுக்காக 3.7 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. திறன்சார் கல்வி கல்லூரி, இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரி ஆகிய இரண்டிலும் மாணவர் சேர்க்கைக்காக கடும் போட்டி நிலவுகிறது. இக்கல்லூரிகளில் கணினி அறிவியல் பிரிவில் சேர விரும்பும் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு 100 சதவீத கட்-ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடும் போட்டி நிலவுவதால் 100 சதவீத கட்-ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
வேறு சில கல்லூரிகளில் 99 சதவீத கட்-ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
இங்குள்ள மோதிலால் நேரு கல்லூரி இளநிலை வணிகவியல் பாடப் பிரிவில் சேர 99.5 சதவீத கட்-ஆஃப் மதிப்பெண்ணும், மைதேயி கல்லூரி, பாஸ்கராச்சார்யா கல்லூரி, ஆத்மா ராம் சனதன் தர்ம் கல்லூரி, ராம் லால் ஆனந்த் கல்லூரி, பிஜிடிஏவி கல்லூரி, ஷாகித் ராஜ்குரு பெண்கள் கல்லூரி உள்ளிட்டவற்றில் சேர 99 சதவீத கட்-ஆஃப் மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வணிகவியல் மற்றும் பொருளாதார மேல் படிப்புகளுக்கு நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக கருதப்படும் எஸ்ஆர்சிசி கல்லூரியில் பொருளாதார படிப்புக்கு 98.25 சதவீதமும், வணிகவியல் படிப்புக்கு 97.37 சதவீதமும் கட்-ஆஃப் மதிப்பெண் அறிவித்துள்ளது. இங்குள்ள கல்லூரிகள் தரமான கல்வியை வழங்கி வருவதாலும், வேலைவாய்ப்புக்கு உத்தரவாதத்தை கல்லூரிகள் பெற்றுத் தருவதால் இங்கு சீட்டுக்காக மாணவ, மாணவிகள் போட்டியிடுவதில் ஆச்சர்யமில்லை.


Click it and Unblock the Notifications












