சென்னை: பாரா மெடிக்கல் கோர்ஸ் எனப்படும் துணை மருத்துவப் படிப்புகள் பயில்வதற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க இன்று(ஜூன்18) கடைசி நாளாகும். அதனால் மாணவ, மாணவியர் அதிக அளவில் கல்லூரிகளில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து வருகின்றனர்.
பி.எஸ்சி. செவிலியர் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகள் மாணவ, மாணவிகள் அதிக அளவில் விரும்புகின்றனர். இந்தப் படிப்புகளுக்கு உடனடி வேலை நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக இருப்பதால் பெரும்பாலான மாணவ, மாணவிகள் பி.எஸ்சி செவிலியர் போன்ற படிப்புகளைப் படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

செவிலியர், இயன்முறை மருத்துவம், ரேடியாலஜி, ரேடியோதெரபி டெக்னாலஜி, கார்டியோ பல்மனரி பெர்ஃப்யூஷன் டெக்னாலஜி, ஆப்தோமெட்ரி ஆகிய துறைகளில் பி.எஸ்சி. படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த 6-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்பட்டன.
இந்தப் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் 480 இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 7,098 என மொத்தம் 7,578 இடங்கள் உள்ளன.
கடைசி நாளான நேற்று 377 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 23,495 விண்ணப்பங்கள் நேரடியாக விநியோகிக்கப்பட்டுள்ளன. இதுதவிர இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டன.
நேரடி விண்ணப்பங்களைப் பெற்றவர்களும், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தவர்களும், நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 18-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் "செயலாளர், மருத்துவக் கல்வி தேர்வுக்குழு, அரசு மருத்துவக் கல்வி இயக்ககம், கீழ்ப்பாக்கம், சென்னை-10' என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதாவது விண்ணப்பத்தை அனுப்ப இன்றே கடைசி நாளாகும்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications












