சென்னை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பிரேக்கேஜ் கட்டணத்தை செலுத்தவில்லை எனக் கூறி 20-க்கும் மேற்பட்ட மாணவர்களைத் தேர்வு எழுதவிடாமல் கல்லூரி நிர்வாகம் செயல்படுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அண்ணா பல்கலைக் கழகம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 571 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கையின் போது முன்வைப்பு தொகையாக ரூ.5 ஆயிரம் பெறுவது வழக்கம். மாணவர்கள் படிக்கின்ற காலத்தில் கல்லூரியில் உள்ள ஆய்வகப் பொருட்கள், கணினி உள்ளிட்ட ஏதேனும் ஓர் பொருளை சேதப்படுத்தி விட்டால் இந்த தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்துக் கொள்ளப்படும்.

காமன் பிரேக்கேஜ் கட்டணம்
இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்தின் அனுமதியின்றி, தேர்வு எழுதும் மாணவர்களிடம் காமன் பிரேக்கேஜ் கட்டணம் என்ற பெயரில் மாணவர்களுக்கு தலா ரூ.300 முதல் ரூ.600 வரை ரசீது இன்றி வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தனியார் பொறியியல் கல்லூரி
குறிப்பாக, ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள செட்டிப்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் இந்த சட்டவிரோத கட்டண வசூலுக்கு ஒத்துழைக்க மறுத்த 20 மாணவர்களை செமஸ்டர் தேர்வு எழுதவிடாமல் தடுத்ததாக தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தனியார் கல்லூரி
மேலும், 500 ரூபாய் கட்டணத்தை செலுத்த மறுத்த இறுதி ஆண்டு மாணவர் ஆகாஷ் ராய்-யின் தேர்வு நுழைவு சீட்டு வழங்கப்படவில்லை, இதனால் தேர்வு எழுத இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டதாக வேதனைத் தெரிவித்துள்ளார் அவர்.
இதனைத்தொடர்ந்து, தனியார் கல்லூரி சட்டவிரோத கட்டண வசூல் செய்வதாக மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலும், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

நீங்க வந்தா மட்டும் போதும்..!
மேலும், 500 ரூபாய்க்காக மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும்வகையில் தேர்வு எழுதவிடாமல் தடுக்கும் இதேக் கல்லூரியில், சரிவர கல்லூரிக்கு வராத மாணவர்களிடம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பில் இல்லாமல் பணம் வசூலித்துவிட்டுத் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பேராசிரியர்களுக்கு ஊதிய பாக்கி
இக்கல்லூரியில் பணிபுரிந்த பேராசிரியர்கள் பலர் ஊதிய பாக்கியால் அவதிப்பட்டு பின் வேலையை விட்டுச் சென்ற பின்னரும் கூட அவர்களுடைய கல்விச் சான்றிதழை வைத்துக் கொண்டு கல்லூரி நிர்வாகம் அடாவடித்தனம் செய்து வருவதாக நீண்டகாலமாகப் புகார் எழுந்து வருகிறது.

மறுக்கும் கல்லூரி நிர்வாகம்
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கல்லூரி நிர்வாகம், பிரேக்கேஜ் கட்டணம் வசூலிப்பதே இல்லை என்றும் படிப்பு முடிந்து வெளியில் சென்ற மாணவர்கள் சிலரின் சதி என்றும் தெரிவித்துள்ளது.