சண்டிகர் : ஹரியானா மாநிலத்தில் மாணவர்கள் காப்பி அடிக்கும் வீடியோ படம் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டையை அதிர வைக்கும் வகையிலான இந்த கூட்டுக் காப்பி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்வு என்பதே ஒரு மாணவரின் கற்றல் திறனை அறிந்து கொள்வதற்காகத்தான். ஆனால் மாணவர்களோ இப்படி அநியாயமாக காப்பி அடித்தது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
இதை விட பெரிய கொடுமை என்னவென்றால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்களும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர் என்பதுதான். அதுதான் இப்போது சர்ச்சையாக மாறியுள்ளது. போலீஸ் விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹரியானாவில் அராஜகம்
ஹரியானா மாநிலம் ஜஜ்ஜர் மாவட்டத்தில்தான் இந்த அராஜகம் நடந்தேறியுள்ளது. இங்குள்ள பள்ளிகள் பலவற்றில் 10ம் வகுப்பு தேர்வின்போது மாணவர்கள் தேர்வை எழுதாமல் கூட்டாக புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு காப்பி அடித்துள்ளனர்.
வீடியோ காட்சி
இந்த மாணவர்களுக்கு கூட்டம் கூட்டமாக பெற்றோர்களும், உறவினர்கள், நண்பர்களும் பள்ளிக்குள் ஊடுறுவி வந்து பிட் கொடுத்தும், புத்தகத்தைக் கொடுத்தும் உதவியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதற வைத்தது
வழக்கமாக பீகார் மாநிலத்தில்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கம். முன்பு மிகப் பெரிய அளவில் காப்பி அடித்தது தொடர்பான புகைப்படம் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் தற்போது ஹரியானாவிலும் இதுபோல நடந்திருப்பதை பலரையும் பதற வைத்துள்ளது.
மாவட்ட கல்வி அதிகாரி
இதுபோன்ற செயல்கள் தொடர் கதையாகி வருவதாவும் கூறுகிறார்கள். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜஜ்ஜர் மாவட்ட கல்வி அதிகாரி சத்பீர் சிங், இதுகுறித்து போலீஸாரிடம் கூறியுள்ளோம். அதிகாரிகள், ஆசிரியர்கள் என பலரும் உதவியுள்ளனர். இது துரதிர்ஷ்டவசமானது என்றார் சத்பீத் சிங்.
பிட் குவியல்
தற்போது மாணவர்கள் காப்பி அடிக்கும் வீடியோ வைரல் ஆகப் பரவி வருகிறது. பலரும் இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஜன்னல் வழியாக பிட்டுகளை கொடுப்பது அதில் உள்ளது. மேலும் ஜன்னலுக்கு வெளியே பிட்டுகள் குவியலாக கிடப்பதும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications












