சென்னை: என்ஜீனியரிங் கல்லூரி இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரிகளில் பணம் செலுத்தி விட்டு படிப்பில் சேராத மாணவர்கள், தாங்கள் செலுத்திய தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
கல்லூரியில் சேராதவர்களிடமிருந்து வைப்புத்தொகையைத் திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பத்தை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வரவேற்றுள்ளது.
தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை ஒற்றைச் சாளர முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஜூன் 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நடத்தியது.
இதற்கு விண்ணப்பித்த மாணவர்கள் முன்வைப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்திவிட்டு, கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்தனர். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினர் ரூ.1,000 முன்வைப்புத் தொகை செலுத்தினர்.
இவர்கள் கல்லூரிகளில் சேரும்போது, இந்த முன்வைப்புத் தொகையை கழித்துவிட்டு மீதித் தொகையை கல்விக் கட்டணமாகச் செலுத்தினால் போதுமானது.
அவ்வாறு இடங்களைத் தேர்வு செய்த சிலர் பல்வேறு காரணங்களால் பி.இ. படிப்புகளில் சேர்வதைத் தவிர்த்துவிட்டனர். இவ்வாறு பொறியியல் கல்லூரிகளில் சேராதவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் செலுத்திய முன்வைப்புத் தொகையில் குறிப்பிட்ட சதவீதம் திருப்பி அளிக்கப்படும்.
அவ்வாறு கல்லூரிகளில் சேராதவர்களிடமிருந்து வைப்புத் தொகையைத் திரும்பப் பெற விண்ணப்பங்களை தற்போது அண்ணா பல்கலைக்கழகம் வரவேற்றுள்ளது.
இதற்கு www.tref.annauniv.edu இணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம்.