சென்னை: பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் பதிவை பள்ளிகளிலேயே செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட எ.சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்புக்கான பதிவைச் செய்யும் முறை சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த முறைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. முன்பெல்லாம் வேலைவாய்ப்பு அலுவலகங்களை பிளஸ்-2 முடித்த மாணவர்கள் தேடித் சென்று பதிவு செய்யும் நிலை இருந்தது. இந்த முறையில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. ஆனால் இப்போது மாணவர்கள் தாங்கள் மதிப்பெண் சான்றுகளைப் பெறும் பள்ளியிலேயே வேலைவாய்ப்புக்காக பதிவையும் செய்யலாம்.
இதற்கான நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளும் செய்துள்ளன.
எனவே பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியைப் பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண் (இருந்தால் மட்டும் கொண்டு வரலாம்), குடும்ப அட்டை, செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை, மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று கொண்டுவர வேண்டும்.
ஒருவேளை 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் தெரியவில்லையெனில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.
சென்னை மாவட்டத்தில் ஜூலை 15 முதல் 27-ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு பதிவுப் பணி அந்தந்தப் பள்ளிகளிலேயே நடைபெற உள்ளது.
இதன்படி, பதிவுப் பணி நடைபெறும் 15 நாள்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்கத் தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு நாளாக கொள்ளப்படும்.
மேலும், www.tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறை இணையதளம் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ் 2 தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்புப் பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.