டெல்லி: இந்தியாவில் 23 பல்கலைக்கழகங்கள், 279 தொழில்நுட்ப நிறுவனங்கள் உரிய அங்கீகாரம் ஏதும் இல்லாதவை என்று பல்கலைக்கழக மானியக் குழு கூறியுள்ளது. இதில் டெல்லியில்தான் அதிக அளவிலான போலி நிறுவனங்கள் இயங்கி வருகிறதாம்.
இந்த கல்வி நிறுவனங்களில் என்ஜீனியரிங் உள்பட பல தொழில்நுட்ப வகுப்புகள் உரிய அங்கீகாரமோ, அனுமதியோ இல்லாமல் நடத்தி வருகின்றனராம். இவை குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும் மானியக் குழு எச்சரித்துள்ளது.
இதில் தலைநகர் டெல்லியில் மட்டும் 66 கல்லூரிகள் உரிய அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வரும் அதிர்ச்சிச் செய்தியையும் மானியக் குழு வெளியிட்டுள்ளது.
அனுமதி கிடையாது:
இந்த போலி நிறுவனங்களில் (சட்டவிரோதமாக இயங்குவதால் இவை போலிதானாம்) பட்டங்களை வழங்க அனுமதி கிடையாது. இங்கு நடத்தப்படும் வகுப்புகளுக்கும் அனுமதி கிடையாதாம். இந்த நிறுவனங்கள் வழங்கும் பட்டம் உள்ளிட்ட சான்றிதழ்களுக்கு மதிப்பும் கிடையாது.
23 போலி பல்கலைக்கழகங்கள்:
நாடு முழுவதும் மொத்தம் 23 போலி பல்கலைக்கழகங்கள் உள்ளனவாம். இதில் டெல்லியில் மட்டும் 7 போலி பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றனவாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு கூறியுள்ளது.
பட்டியல் வெளியீடு:
பல்கலைக்கழக மானியக் குழுவும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலும் இணைந்து இதுதொடர்பாக பட்டியல் தயாரித்து அதை ஆன்லைனிலும் வெளியிட்டுள்ளன. இவர்களது இணையதளங்களில் இதைப் போய்ப் பார்க்கலாம்.
இங்கு பார்க்கலாம்:
இந்த போலிகளின் பட்டியலை www.ugc.ac.in மற்றும் www.aicte-india.org ஆகிய இணையதளங்களில் போய்ப் பார்க்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா, உ.பி., மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகியவற்றில்தான் அதிக அளவில் போலி நிறுவனங்கள் உள்ளனவாம்.


Click it and Unblock the Notifications












