அஜித் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை படத்திற்கு செல்ல வேண்டும் என மாணவன் ஒருவர் விடுமுறை கேட்டு ஆசிரியருக்குக் கடிதம் எழுதிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மேலும், மாணவனின் இச்செயலுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில், வீட்டில் பெற்றோர்களை அழைத்து வர சொல்லி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
லீவு லெட்டர்
நாம் சிறு வயதில், அதாவது 90‘ஸ் கிட்ஸ்களைப் பொருத்த வரையில் பள்ளி, கல்லூரி விடுமுறை எடுக்க வேண்டும் என்றால் முறையாக கடிதம் எழுதி, அதற்கு பெற்றோர்களின் ஒப்புதல், சில தில்லு, முல்லு என பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து லீவு எடுத்த நினைவுகள் இருக்கும். ஆனால், இன்றைய தலைமுறையினர் அவ்வாறு இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக ஓர் சம்பவம் நம்ம ஊரில் நடந்துள்ளது.
நேர் கொண்ட பார்வை
தமிழ் திரைத் துறையில் முன்னணி நடிகராகவும், அதிகப்படியான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவரும் தல அஜித். கடந்த வியாழனன்று இவர் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி திரையரங்குகள் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது நம் அனைவருக்குமே தெரியும். இந்த நிலையில் கல்லூரி மாணவன் ஒருவன் தான் அஜித் படத்திற்குப் போவதற்கு விடுமுறை அளிக்குமாறு ஆசிரியருக்கு விடுமுறைக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
சுவாரஸ்யமான கடிதம்
இச்சம்பவம் எங்கே நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால், அந்த கடிதம் மிகப் பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சுவாரஸ்யக் கடிதத்தில் அப்படி என்னதான் இருந்துச்சு தெரியுமா?
கல்லூரி மாணவரா..!!
இந்த சுவாரஸ்யமான நிகழ்வு நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் நடந்ததாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அக்கடிதத்தில், தன்னுடைய துறைத் தலைவரிடம் விடுமுறை கேட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த துறைத் தலைவர் அந்த கோரிக்கை கடிதத்தை நிராகரித்ததோடு, அந்த மாணவனின் பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வரும்படியும் உத்தரவிட்டுள்ளார்.
Respected sir...
Respected sir, ultimate star Ajith Kumar அவர்கள் படத்திற்கு (NKP) போக இருப்பதால் நாளை (08/08/2019) அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. என்று குறிப்பிட்டு தேதி குறிப்பிட்டு கையெழுத்திட்டு இருக்கிறார்.
பகிரங்கமாகக் கடிதம்
ஒரு காலத்தில், உடல் நலக் குறைவு, ஊருக்கு போறேன் உள்ளிட்டு பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு லீவு லெட்டர் எழுதிய காலகட்டம் மாறிவிட்டது. இன்றைய தலைமுறை மாணவர்கள் சினிமா பார்ப்பதற்குக் கூட விடுமுறை கேட்டு பகிரங்கமாகக் கடிதம் எழுதுவது பெரும் அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது.