தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த நெற்குந்தி கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் மகள் சங்கீதா 450 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவருக்கான மதிப்பெண் பட்டியலில் பெண் என்பதற்கு பதிலாக 3-ம் பாலினத்தவர் என தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை மாணவி கண்டுபிடித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறினார்.
அவர் கல்வி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அவருடைய சான்றிதழில் திருத்தம் செய்து கொடுக்க கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது.
வழக்கமாக மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவ - மாணவிகளின் பெயர், அவர்களது பெற்றோர்கள் பெயர் மற்றும் இன்சியல் ஆகியவை தவறுதலாக இருக்கும். இதை மாற்றித் தருவோம். தற்போது மாணவி சங்கீதாவின் பெயரை ஆன்லைனில் பதிவு செய்யும் பொழுது பெண் என்பதற்கு பதிலாக 3-ம் பாலினத்தவர் என்று பதிவாகி விட்டது. இந்த தவறை திருத்த கல்வித்துறை அவகாசம் தரும். நாங்கள் அந்த மாணவிக்கு இந்த தவறை திருத்தி சான்றிதழ் வழங்குவோம் என
தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் பள்ளி நிர்வாகம் பெற்றோரிடமும், மாணவியிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளது. விரைவில் சரி செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.