சென்னை: பி.இ. படிப்புகளில் சேர இசிஇ பிரிவில் ஆர்வம் காட்டி வந்த மாணவர்களிடையே இப்போது மெக்கானிக்கல் பிரிவு முன்னிலை பெற்றுள்ளது.
இதுநாள் வரை பி.இ. கவுன்சிலிங்கின்போது இசிஇ பிரிவைத்தான் மாணவ, மாணவிகள் அதிக அளவில் தேர்வு செய்து வந்தனர். ஆனால் நேற்று மாணவ, மாணவிகள் அதிக அளவில் மெக்கானிக்கல் பிரிவைத் தேர்வு செய்துள்ளனர்.

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளில் சேர்வதற்கான ஒற்றைச சாளர முறையை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
ஜூன் 28 முதல் 30-ம் தேதி வரை மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகளுக்கான கவுன்சிலிங் நடைபெற்றது. ஜூலை 1-ம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் தொடங்கியுள்ளது. ஆரம்பம் முதல் பி.இ. படிப்பில் இசிஇ பிரிவைத்தான அதிக அளவில் மாணவ, மாணவிகள் தேர்வு செய்து வந்தனர்.
ஆனால் நேற்று இசிஇ பிரிவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு மெக்கானிக்கல் பிரிவு முன்னேறியுள்ளது. மெக்கானிக்கல் பிரிவை இதுவரை 11,574 பேர் தேர்வு செய்திருக்கின்றனர். அதே நேரத்தில் இசிஇ பிரிவை 11,339 பேர் தேர்வு செய்துள்ளனர்.
இதன் மூலம் கடந்த ஆண்டுகளைப் போல் இந்த முறையும் மெக்கானிக்கல் பிரிவே முன்னிலை பெறத் தொடங்கியிருக்கிறது.
கடந்த 2011-ஆம் ஆண்டு முதலே மெக்கானிக்கல் பிரிவை அதிக அளவில் மாணவர்கள் தேர்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இந்தப் பிரிவையே அதிக மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
கடந்த கல்வியாண்டு (2014-15) கலந்தாய்வின் போது, ஆரம்பம் முதல் மெக்கானிக்கல் பிரிவே முன்னிலை பெற்று வந்தது. கலந்தாய்வின் முடிவில் 43,207 மெக்கானிக்கல் இடங்களில் 26,770 இடங்கள் நிரம்பின. இசிஇ பிரிவைப் பொருத்தவரை 41,484 இடங்களில் 19,012 இடங்கள் மட்டுமே நிரம்பின.
இந்த ஆண்டிலும் மெக்கானிக்கல் பிரிவில்தான் அதிக அளவில் மாணவர்கள் சேர்வார்கள் என்று தெரிகிறது. பொதுப் பிரிவு கவுன்சிலிங் முடிய இன்னும் 13 நாட்கள் மட்டுமே பாக்கியுள்ளது.
இசிஇ பிரிவில் மொத்தமுள்ள 38,427 இடங்களில் இதுவரை 11,339 இடங்கள் நிரம்பியிருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக சிஎஸ்இ பிரிவை 7,716 மாணவ, மாணவிகளும், இஇஇ பிரிவை 6,785 பேரும், சிவில் பிரிவை 6,652 பேரும் தேர்வு செய்திருக்கின்றனர்.
மெக்கானிக்கல் பிரிவில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உடனடியாக வேலை கிடைப்பதால் அதிக அளவில் மாணவ, மாணவிகள் இந்தப் பிரிவைத் தேர்வு செய்வதாகத் தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications












