சென்னை: தேர்வு எழுதும் போது பறிமுதல் செய்யப்பட்ட கத்தி, செல்போனை கேட்டு பெண் ஆசிரியரை மிரட்டிய மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கியது. அனைத்து தேர்வுகளும் முடியும் கட்டத்துக்கு வந்துள்ள நிலையில் 31ம் தேதியுடன் தேர்வுகள் முடிவுக்கு வந்துவிடும். இந்ததேர்வில் பல்வேறு சம்பவங்களை தேர்வுத்துறை எதிர்கொண்டுள்ளதை குறிப்பிட வேண்டும். தேர்வு தொடங்கிய முதல் நாளே தமிழ் முதல் தாள் தேர்வில் தமிழகத்தில் பரவலாக மாணவர்கள் பிட் அடித்துள்ளனர்.
பறக்கும் படையினர் பிடித்ததாக சுமார் 10 பேர் முதல் நாளில் சிக்கியுள்ளனர்.
இதையடுத்து ஒவ்வொரு நாளும் பிட் அடித்து சிக்குவோர் எண்ணிக்கை அதிகரித்தே வந்துள்ளது. நேற்றைய இயற்பியல் தேர்வில் மட்டும் தமிழகம் முழுவதும் 63 பேர் பிட் அடித்து சிக்கியுள்ளனர். இது போன்ற சம்பவங்களை தடுக்க தேர்வுத்துறை அதிரடி நடவடிக்கையை எடுத்தது.அதன்பேரில் மாணவர்கள் பிட் அடித்தால் அறை கண்காணிப்பாளர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என்றும் அறிவித்தது. ஆனால் அதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்தினர்.
இதற்கிடையே கடந்த 18ம் தேதி நடந்த கணக்குத் தேர்வின் கேள்வித்தாள் வாட்ஸ் ஆப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்களுக்கு இடையில் கடந்த 23ம் தேதி நடந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் இரண்டு மாணவர்கள் கத்தியுடன் வந்து தேர்வு எழுதியுள்ளனர். இது ஆசிரியர்களை கலங்க அடித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள அரசுமேனிலைப் பள்ளியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 23ம் தேதி நடந்த கம்ப்யூட்டர் தேர்வு எழுத வந்த மாணவர்களில் இருவர் செல்போன் மற்றும் கத்தி வைத்திருந்ததை அந்த தேர்வு அறையின் கண்காணிப்பாளராக இருந்த பெண் ஆசிரியை கைப்பற்றி அப்பள்ளியின் தலைமை ஆரியரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கு பிறகு தேர்வு அறைக் கண்காணிப்பாளராக பணியாற்றிய பெண் ஆசிரியரின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்த அந்த இரு மாணவர்களும் நேற்று முன்தினம் அந்த ஆசிரியையின் வீட்டுக்கு சென்று அவர் மாணவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த கத்தி மற்றும் செல்போனை திரும்ப தரவேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் பெண் ஆசிரியை புகார் தெரிவித்தார். நேற்று அந்த இரு மாணவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.