சென்னை : தமிழக அரசு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர தாமதப்படுத்துவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அதிகமாக சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாற்றத் தொடங்கியுள்ளனர்.
நீட் நுழைவுத் தேர்வினை தமிழக மாணவர்களும் எழுத வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படாத வரைக்கும்
மாணவ மாணவியர்களால் நீட் தேர்விற்கு தயாராவது கடினமான ஒன்றாகத்தான் இருக்கும்.
தமிழகத்தில் சமச்சீர் கல்வியில், மெட்ரிக் ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல், மாநில பாடத்திட்டம் இணைக்கப்பட்டு பாடம் கற்று தரப்படுகிறது. ஆனால் இந்தப்பாடத்திட்டத்தில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக மாற்றங்கள் எதுவும் செய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நீட் தேர்வு
மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கட்டாயம் நீட் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அடுத்த வருடம் முதல் பொறியியல் படிப்பில் சேர விரும்புபவர்களுக்கும் நீட் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இயில் மாணவர் சேர்க்கை
முன்பெல்லாம் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படித்த மாணவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க, மாநில பாடத்திட்டத்துக்கு மாறி வந்தனர். ஆனால், நீட், ஜே.இ.இ. போன்ற நுழைவுத் தேர்வுகள் கட்டாயமாகி வருவதால், மீண்டும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இடப்பற்றாக்குறை
அதனால் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் பிளஸ்1 வகுப்பிற்கு இந்த வருடம் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு விரைந்து செயல்பட்டால்தான் தமிழக மாணவர்களின் டாக்டர், என்ஜினீயர் கனவு நிஜமாகும்.
மேல்நிலை கல்வி அனுமதி
இது குறித்து, சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர்கள் சிலர் கூறுகையில், தேசிய நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற, எளிதாக இருக்கும் என்ற கண்ணோட்டத்தில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் மாணவர்கள் சேர்கின்றனர். அதனால், 8ம் வகுப்பு வரை மட்டும் பாடம் நடத்திய பல பள்ளிகள், மேல்நிலை கல்வி வரை, சி.பி.எஸ்.இ., திட்டத்தில் வகுப்புகளை நடத்த அனுமதி கேட்டு வருகின்றன' என்றனர்.