சென்னை : மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கல்வித்துறை வளர்ச்சி குறித்து ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் சென்னை தியாகராயநகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு என்ற முறைக்கு சங்க பிரதிநிதிகள் வரவேற்பு தெரிவித்தனர். மேலும் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உயர்த்த வேண்டும். எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை தொடங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
ஜெயலலிதா இருந்தபோது மாணவர்களுக்கு 14 பொருட்களை இலவசமாக வழங்கினார். அந்த பொருட்களை ஏ.இ.ஓ அலுவலகத்திற்கு சென்று எடுத்துவர வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இனி அந்த பொருட்களை பள்ளிகளுக்கு நேரடியாக சென்று வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆசிரியரிகளின் கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப இந்த அரசு நிறைவேற்றும் எனவும் கூறியுள்ளார்.
வெளிப்படையான முறையிலும் வெளிப்படை தன்மையுடனும் இந்த அரசு செயல்படும். மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஸ்மார்ட் கார்டு ஒன்றை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கல்வித்துறை மானியத்தில் அதை நிறைவேற்ற இருக்கிறோம். மாணவர்களின் முழு விபரங்களும் ஸ்மார்ட் கார்டில் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த ஸ்மார்ட் கார்டு வந்து விட்டால் மாற்றுச் சான்றிதழ் தேவை என்பது இருக்காது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டு அட்டையில், ஆதார் எண், ரத்தப்பிரிவு எண், சாதி என மாணவர்களைப் பற்றிய அத்தனை விவரங்களும் இடம்பெற்றிருக்கும். இதனால் மாற்றுச் சான்றிதழ் தேவை என்பது இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.