சென்னை: அமெரிக்க பல்கலைக்கழகத்துடன் இணைந்து பிபிஏ படிப்புகளை கோவையிலுள்ள கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் அறிமுகம் செய்கிறது.
இதற்காக அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்திலுள்ள கிளேட்டன் பல்கலைக்கழகத்துடன் கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி 2 ஆண்டுகள் கிருஷ்ணா இன்ஸ்டிடியூட்டிலும், அடுத்த இரண்டு ஆண்டுகள் அட்லாண்டா சென்று கிளேட்டன் பல்கலைக்கழகத்தில் இந்தப் படிப்புகளைப் பயிலும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இத்தகவலை கிளேட்டன் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள நிர்வாகக் கல்லூரியின் டீன் அவினந்தன் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
திறமையான பேராசிரியர்கள், அருமையான படிப்புச் சூழல், நல்ல வேலைவாய்ப்பு, உலகத் தரம்வாய்ந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் என கிளேட்டன் பல்கலைக்கழகம் மாணவர்களை வரவேற்கிறது என்று அவினந்தன் முகர்ஜி தெரிவித்தார்.
இந்த ஆண்டு மொத்தம் 20 மாணவர்கள் இந்த படிப்பில் சேர்ந்துள்ளனர் என்றும், இந்தியாவிலுள்ள இன்ஸ்டிடியூட் ஒன்றுடன் கிளேட்டன் பல்கலைக்கழகம் முதன்முதலாக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது என்றும் தெரிவித்தார் அவர்.