நாட்டின் மிகச்சிறந்த அரசியல் மேதையாகவும், சட்டமேதையாகவும் அறியப்பட்ட டாக்டர் அம்பேத்கர் நாட்டின் சமூக அமைப்பை வடிவமைத்ததில் மிகப்பெரிய பங்காற்றினார். அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையால் நாட்டின் சமூக அமைப்பு வடிவமைக்கப்பட்டு எழுச்சி கண்டது.
மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகவும், நாடே கண்டறியாத சட்ட மாமேதையாகவும், தீண்டாமை என்னும் அரக்கனை ஒழிக்கப் புறப்பட்ட புயலாகவும், அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்ததில் பெரும்பணியை ஆற்றியவராகவும் அறியப்படும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கனவு கண்டது இந்தியாவை விடுதலை அடையச் செய்வதற்காக மட்டுமல்ல. நாட்டில் உள்ள தீண்டாமையை ஒழிக்கவும், சாதி, மத, இன பாகுபாட்டை களையவும் மிகப்பெரிய கனவைக் கண்டார்.
பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த இந்திய நாட்டை, சுதந்திர நாடாக மாற்ற அவர் மிகப்பெரிய கனவு கண்டார்.
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கு இடையேயும் பாகுபாடு காட்டக்கூடாது என்பதுதான் அவர் எண்ணம். தீண்டாமை என்ற சொல்லே இருக்கக்கூடாது என்று விரும்பியவர் அவர்.
சுதந்திரம். தலித்துகள், சமூகம், அரசியலமைப்பு உருவாக்கம் ஆகியவற்றில் அவர் செய்த மொத்த பங்களிப்பா்ல் நாடே சுபிட்சம் பெற்றது.
நாட்டின் சமூக அமைப்பை வடிவமைப்பதற்கு அவர் பெரும் பங்காற்றினார் என்பதே உண்மை.
பிறப்பால் சிலர் புத்திசாலிகளாக பிறக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்.
தேசிய சிந்தனையாளர், தத்துவஞானி, தேசபக்தர், சமூக சீர்திருத்தவாதி, தலித்துகளின் சமூக முன்னேற்றத்துக்காக வாதிடுபவர், அறிஞர், எழுத்தாளர், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர், பொருளாதார நிபுணர், சிறந்த வழக்கறிஞர், பெண்ணியவாதி எனப் பல பெயர்களில் அறியப்பட்டார்.
நாடு முழுவதும் ஏன் இந்த உலகம் முழுவதுமே மிகப்பெரிய மாமேதையாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர். சமூக முன்னேற்றத்துக்காகவும், தீண்டாமை ஒழிப்புக்காகவும், சமூகத்தில் அனைவருமே முன்னேற்றத்தை அடையவேண்டும் என்ற தீவிர சிந்தனையைக் கொண்ட அம்பேத்கர், ஒரு பான் இந்தியா தேசிய தலைவராக பாராட்டப்படுகிறார்
சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் லட்சியங்களால் வலுப்படுத்தப்பட்ட நவீன நாடு உருவாக வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையைப் பெற்றிருந்தார்.

நாட்டில் தீண்டாமை ஒழிந்தாலே, பெரிய அளவில் சமூக மாற்றம் நிகழும் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார் அம்பேத்கர்.
நாட்டின் சமூக வடிவமைப்பை மாற்றுவதற்கு தீண்டாமை ஒழிப்பு மட்டுமல்லாமல் பெண்களுக்கு சுய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது அம்பேத்கரின் எண்ணமாக இருந்தது. இதற்காக அப்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதுதான் இந்து கோட் மசோதா எனப்படும் இந்து தனிநபர் மசோதாவாகும்.
ஒரு தார திருமணம், சாதிய அமைப்பை ஒழித்தல், ஆண், பெண் சமத்துவத்தை நிறுவதல், பெண்களுக்கு சொத்து உத்தரவாதம்,
உரிமைகள் மற்றும் விவாகரத்து உரிமை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரம்பரை உரிமை ஆகியவற்றை பெற்றுத் தருவது அம்பேத்கரின் எண்ணமாக இருந்தது. இதையேதான் இந்து தனிநபர் மசோதாவில் உள்ள ஷரத்துகள் வலியுறுத்தியது.
கடந்த காலத்தில் இந்துப் பெண்கள் அனுபவிக்காத உரிமைகளைப் பெற்றுத் தருவதாக இந்த மசோதா அமைந்தது. இதன்மூலம் பெண்கள் சுய அதிகா
ரம் பெற்றவர்களாக மாறுவார்கள் என்ற உரிமையைப் பெற்றுத் தந்தார் அண்ணல் அம்பேத்கர்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இருந்த அன்றைய காலகட்டத்தின்போது ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார் அண்ணல் அம்பேத்கர். அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் சமுதாய அமைப்பிலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையிலும் அதிகாரம் இருக்க வேண்டும் என்று அவர் உண்மையாகவே எண்ணினார்.
நாட்டின் தெருக்களில் உள்ள கிணறுகள், குளங்கள், குட்டைகளில் இருந்து தலி,் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சம உரிமை வழங்கவேண்டும் என்பதை சட்டமாக்கி அதை அமல்படுத்தினார் அம்பேத்கர். நாட்டில் தீண்டாமை என்னும் கொடிய அரக்கனின் இழிவுகள் சட்டப்பூர்வமாக ஒழிய அவர் அரும்பாடு பட்டார்.
1930-இல் லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்கர் பங்கேற்றார். அந்த வட்டமேஜை மாநாட்டுக்கு அவர் செல்லும்போது, நமது நாட்டில் உள்ள தலித், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன நியாயம் கிடைக்க வேண்டுமோ அதற்காக நான் இறுதி மூச்சு வரை உள்ளவரை போராடுவேன். இதில் எந்த மாற்றமும ்கிடையாது. அதே நேரத்தில் சுதந்திர போராட்டத்தையும், இந்திய விடுதலையையும், சுயராஜ்யத்தையும் நான் எப்போதும் முழுமையாக ஆதரிப்பேன் என்று சூளுரைக்கிறேன்' என்று கர்ஜித்துவிட்டு சென்றார்.
இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் பிரபுக்கள், வைஸ்ராய்களின் பிரித்தாளும் சூழ்ச்சி திட்டங்களுக்கு அவர் எப்போதும் பலியானதில்லை. அவர் இந்திய நாட்டுக்கும், விடுதலைப் போராட்டத்துக்கும் எதிராக இருந்தவர் அல்ல. இரண்டாவது வட்டமேஜை மாநாடு நடந்தபோது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வலியுறுத்தப்பட்டது.
அதாவது, சாதிவாரியாக அதிகாரப் பகிர்வு மற்றும் சலுகைகள் குறித்து விவாதிக்கும்போது, தலித்துகள், தாழ்த்தப்பட்ட பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு (தீண்டாமை இழிவுப் பிரச்சினைகளுக்கு ஆளானவர்கள்) தனி வாக்குரிமை மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என அண்ணல் அம்பேத்கர் சூளூரைத்தார்.

அவரது முழு முயற்சியால் ஒரு தொகுதியில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே நேரத்தில் அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட பட்டியல் சாதியினரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் இரட்டை வாக்குரிமை தாழ்த்தப்பட்ட பட்டியலைச் சாதி மக்களுக்கு வழங்கப்பட முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்தத் திட்டத்தை பிரிட்டிஷ் அரசு, பிரபுக்களின் பிரித்தாளும் சூழ்ச்சி என அண்ணல் காந்தியடிகள் கடுமையாக எதிர்த்துப் பேசினார். இது கூடாது என்பதிலும் அவர் உறுதியாக
இருந்தார். இதையடுத்து தேசத்தந்தை காந்தியடிகள், உண்ணாவிரத போராட்டத்தையும் துவக்கினார்.
இதன் விளைவாக 1931-ம் ஆண்டு செப்டம்பர் 24-ல் அண்ணல் காந்திஜிக்கும் பாபா சாகேப் அம்பேத்கருக்கும் இடையே 'பூனா' ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி தாழ்த்தப்பட்ட பட்டியல் சாதியினருக்கு தனி வாக்குரிமை என்பதற்கு பதிலாக தேர்தல் முறையில் பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி முறை (Reserve Constituency) உருவாக்கப்பட்டது.
இது அண்ணல் அம்பேத்கரின் தனி முயற்சியால்தான் உருவானது.
இதனால்தான் இன்றும் நாடு முழுவதும் ரிசர்வ் தொகுதிகள் (தனித்தொகுதிகள்) உள்ளன. இந்தத் தொகுதிகளில்தான் தலித், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். தலித், பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைத்தான் ரிசர்வ் தொகுதி என்று அழைக்கிறோம். தலித் மக்களின் குரலாக அவர்கள் மக்களவையில் எதிரொலித்து அவர்களுக்கு உரிய உரிமையைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
நாட்டில் தனித்தொகுதி முறை என்பது தாழ்த்தப்பட்ட இந்து மக்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்பதுதான் சட்டமானது. முஸ்லிம்களோ, கிறிஸ்தவர்களோ, இந்துக்களின் பட்டியல் சாதியில் அல்லாதவர்களோ அதாவது உயர் சாதியினரோ ரிசர்வ் தொகுதிகளில் (தனித்தொகுதி) போட்டியிட முடியாது என்பதே சட்டமாகும்.
இந்து பட்டியல் சாதியினர் என போலிச் சான்றிதழ் கொடுத்து தனித்தொகுதியில் ஒருவர் போட்டியிட்டால் அது சட்டப்படி குற்றமாகும். அவர் கைது செய்யப்படுவதோடு, அவரது தேர்வும் செல்லாததாகிவிடும்.
அதுமட்டுமல்லாமல், பட்டியல் சாதியினரின் இட ஒதுக்கீட்டில் பிறர் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதையும் அண்ணல் அம்பேத்கர் தடுத்தார். தலித் மக்களின் இட ஒதுக்கீட்டு சலுகைகள், உரிமைகள் ஆகியவற்றைப் பெற இந்துக்களாக இருந்தால் மட்டுமே முடியும் என்கிற உன்னதமான நிலையை அண்ணல் அம்பேத்கர் நாட்டில் உருவாக்கிக் கொடுத்தார்.
நாட்டின் சமூக வடிவமைப்பை மாற்றுவதற்காக அண்ணல் அம்பேத்கர் அன்றே கணித்து அதை திட்டமிட்டு அமலாக்கிய பெருமை கொண்டவர்.
இதேபோல் சுதந்திரத்தின்போது சில புரட்சிகரமான கருத்துகளை அண்ணல் அம்பேத்கர் தெரிவித்தார். இந்தியா -பாகிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. அப்படி நாடு பிரிவினை செய்யப்பட்டபோது ஜனத்தொகை பரிவர்த்தனையை நாம் செய்து கொள்வதே இந்து -முஸ்லிம் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்று சட்டமேதை அம்பேத்கர் எடுத்துரைத்தார். அதாவது இந்தியாவில் இருக்கின்ற அனைத்து முஸ்லிம்களையும் பாகிஸ்தான் நாட்டுக்கு அனுப்பிவிட்டு, பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் அனைவரையும் இந்தியாவுக்கு அழைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அம்பேத்கர் தெளிவுபடுத்தினார்.
ஆனால் இதற்கு இந்தியாவிலுள்ள மற்ற தலைவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் பெண்களுக்கு எந்தவித சுதந்திரமும் இல்லை. சொத்துரிமையும் இல்லை. வீட்டிலேயே அடைக்கப்பட்டு இருந்தனர். ஒரு பெண்ணானவர் தனது தந்தையையோ, கணவரையோ அல்லது மகனையோ எதிர்த்துப் பேச முடியாத நிலைதான் இருந்தது. அதை மாற்றினார் அம்பேத்கர்.
நாட்டில் உள்ள மகளிருக்கு சொத்துரிமைச் சட்டம் கொண்டு வந்ததில் அண்ணல் அம்பேத்கருக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. இதே போல தொழிலாளர் நல உரிமைச் சட்டங்கள் பலவற்றை உருவாக்கி நாட்டின் முன்னோடி என்பதை நிரூபித்தார்.
அதனால்தான் அவர் இன்றும் அண்ணல் அம்பேத்கர், சட்டமாமேதை, சமூக சீர்திருத்தவாதி, தீண்டாமையை ஒழிக்கப் புறப்பட்ட தீச்சுடரோன் என்று அன்பாக அழைக்கப்படுகிறார்.
காலங்கள் மாறினாலும் அண்ணல் அம்பேத்கரின் எண்ணங்கள் திட்டங்களாக மாறி இன்று சமூக வடிவமைப்பை மாற்றுவதற்கு உறுதுணையாக நிற்கின்றன என்றால் அது மிகையல்ல.


Click it and Unblock the Notifications












