சென்னை: 10, பிளஸ் 2 தனித் தேர்வு எழுத விரும்புவோர் விண்ணப்பிக்கத் தவறியிருந்தால் அவர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்புச் செய்துதுள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதியில் தொடங்க உள்ளன. இந்தத் தேர்வுகளுக்கு உரிய காலத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள், இப்போது சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தங்களது மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் சேவை மையத்துக்கு நேரில் சென்று செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இவர்களுக்கு சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். தேர்வுக் கட்டணத்துடன் சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000, பதிவுக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.
அதேபோல், பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், கடலூர், சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே தலா 2 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
இவர்கள் தேர்வுக் கட்டணத்துடன் சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.500, பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.
அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்களை www.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.