தமிழ்நாட்டிலுள்ள மிகப்பழமையான கல்லூரிகளில் ஒன்றாகவும், மிகச் சிறந்த மாணவர்களை உருவாக்கித் தந்ததுமான பச்சையப்பன் கல்லூரி தற்போது 200-வது ஆண்டை நோக்கி வெற்றி நடை போட்டு வருகிறது.
19-ம் நூற்றாண்டில் இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது தமிழகத்தில் கல்லூரிகளை ஆங்கிலேயர்களே நடத்தி வந்தனர். ஆனால், அந்தக் காலத்திலேயே தனியாரால் தொடங்கப்பட்ட கல்லூரிதான் பச்சையப்பன் கல்லூரி. 1842-ஆம் ஆண்டு இந்து மாணவர்களுக்காக தொடங்கப்பட்டதுதான் பச்சையப்பன் கல்லூரி. கருப்பர் நகரம் என்று அழைக்கப்பட்ட அன்றைய பிராட்வே பகுதியில் முதலில் ஒரு பள்ளிக் கூடமாகத் தொடங்கப்பட்ட இது, பச்சையப்பா மத்தியக் கழகம் என்ற பெயரில் இயங்கி வந்தது.
பின்னர் பச்சையப்பன் கல்லூரியாக தரம் உயர்ந்தது.
பச்சையப்பன் கல்லூரி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள ஓர் மிகத் பழமையான கல்லூரி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. வள்ளல் பச்சையப்ப முதலியார் மறைவுக்குப் பின்னர், அவரது உயிலில் எழுதியபடி அறச்செயல்களுக்காக அவர் ஒதுக்கியிருந்த நிதியைக் கொண்டு, பச்சையப்பா பள்ளி, பிராட்வேயிலிருந்த பச்சையப்பன் மத்திய நிறுவனத்தால் (Pachaiyappa's Central Institution) 1842-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தொடங்கப்பட்டது. பின்னர் 1889-ம் ஆண்டு கல்லூரியாக தகுதி உயர்வு பெற்றது.

1947-ஆம் ஆண்டு வரை இந்திய மாணவர்களை மட்டுமே இந்தக் கல்லூரி நிர்வாகம் சேர்த்து வந்தது. தற்போது அனைத்து நாடுகள், மாநில, மாவட்ட மாணவர்களும் இந்தக் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
1784-ல் காஞ்சிபுரம் மாவட்டம், பெரியபாளையத்தில் பிறந்த பச்சையப்ப முதலியார், ஆங்கிலேயரிடம் பணியில் சேர்ந்தார். தனது தன்னம்பிக்கையால் உயர்ந்த பதவிகளை எட்டினார். தனது 22-வது வயதிலேயே பெரும் நிதியாளராகவும் வணிக மேதையாகவும் மாறினார்.
இவர் தமது சொத்துக்கள் அனைத்தையும் இறைவனுக்கும், மனிதத்திற்கும் அர்ப்பணித்தார். இவர் 1794-ஆம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி கும்பகோணத்தில் இருந்தபோது தனது மரணம் குறித்து அறிவித்து தமது உயிலை எழுதினார். இவரது உயிலின்படி இவரது சொத்துகள் அறக்கட்டளையாால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை மூலம் உருவானதுதான் பச்சையப்பன் கல்லூரி.
இந்தக் கல்லூரி தற்போது 181-வது ஆண்டில் உள்ளது. இன்னும் 19 ஆண்டுகளில் 200-வது ஆண்டை நோக்கி பீடுநடை போட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் மூலம் ஏராளமான அறிஞர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், கவிஞர்கள், பேராசிரியர்கள் உருவாகியுள்ளனர்.
கடந்த 1989-ஆம் ஆண்டு தமிழகத்தின் 9-ஆவது சட்டப்பேரவை அமைந்தது. அப்போது அங்கு இருந்த 234 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 7 அமைச்சர்கள் உள்பட 33 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களாக இருந்தனர்.
தமிழகத்தின் கலை, இலக்கியம், அரசியல், விளையாட்டு என அனைத்துத் துறைகளுக்கும் அறிஞர்களையும், சரித்திர நாயகர்களையும் வாரி வழங்கியுள்ளது இந்த கல்வி போதிமரம்.
இந்தக் கல்லூரியில்தான் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா தங்கிப் படித்தார்.
1921-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட விடுதியில்தான் அறிஞர் அண்ணா தங்கியிருந்தார். அவர் தங்கிப் படித்த அறை இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது.
இந்தக் கல்லூரியில் பேராசிரியர் க.அன்பழகன், நெடுஞ்செழியன், துரைமுருகன் என பல தலைவர்களை படித்துள்ளனர்.
மேலும், கணிதமேதை ராமானுஜன், நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார், தமிழறிஞர் மு.வரதராசனார், நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகர், ஆந்திர முன்னாள் முதல்வர் பிரம்மானந்த ரெட்டி, ஐஆர் 8, ஆர்.டி.வி. போன்ற புதுவகை அரிசி வகைகளைக் கண்டறிந்த உலக அரிசி விஞ்ஞானி வி.டி.ஜான், சர்.பிட்டி. தியாகராயர், அவ்வை நடராசன், நல்லி குப்புசாமி செட்டி, கவிஞர் வைரமுத்து, நா.முத்துக்குமார், கிரிக்கெட் வீரர் ராபின் சிங் உள்ளிட்டோரும் பச்சையப்பன் கல்லூரியில் படித்தவர்கள்தான்.
300-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இந்தக் கல்லூரியில் இருந்துதான், உருவாகியுள்ளனர்.
கல்லூரியில் டாக்டர் மு.வ. தொடங்கி, க.அன்பழகன் உள்ளிட்டோர் பணியாற்றியுள்ளனர்.
இந்தக் கல்லூரியில் இருந்து இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பட்டங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.
1896-ல் மகாத்மா காந்தி கல்லூரிக்கு வந்து தென் அமெரிக்காவில் பிரிட்டிஷ் இந்தியர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். 1897-ல் சுவாமி விவேகானந்தர் வந்து சென்றுள்ளார். 1927-ல் மகாத்மா காந்தி மீண்டும் இங்கு வருகை தந்தார். 1963-ல் வள்ளல் பச்சையப்பர் சிலையை அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தார்.
1968-ல் முதல்வர் அண்ணா தலைமையில் 125-ஆவது ஆண்டு விழாவும், 1994-ல் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 150-ஆவது ஆண்டு விழாவும் நடைபெற்றது.
சென்னை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக தற்போது இது இருந்து வருகிறது. தற்போது இந்தக் கல்லூரியில் பி.ஏ.வரலாறு, பொருளாதாரம், தத்துவயியல், தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பி.காம். கார்பொரேட் செகரட்டரிஷிப், பி.காம் ஜெனரல், எம்.ஏ. வரலாறு, பொருளாதாரம், தத்துவவியல், தமிழ், ஆங்கிலம், எம்.எஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பிரிவுகள் உள்ளன.
ஆராய்ச்சிப் பிரிவில் பிஎச்.டி வகுப்புகள் தமிழ், ஆங்கிலம், கணிதம் என பல்வேறு பாடங்களில் வழங்கப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல் மாலை நேரக் கல்லூரியும் இயங்கி வருகிறது. இதில் பி.காம், பி.காம் அக்கவுண்டிங் அன்ட் பைனான்ஸ், எம்.எஸ்சி கணிதம், எம்.காம். பிஎஸ்சி கம்ப்யூட்டர் அறிவியல், பிசிஏ, பி.காம். பேங்க் மேனேஜ்மென்ட், பிபிஏ படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன.
ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கி வரும் இந்தக் கல்லூரி விரைவில் பல்கலைக்கழகமாக உருவெடுக்க வேண்டும் என்பது கல்லூரி முன்னாள் மாணவர்களின் பேராசையாக உள்ளது.


Click it and Unblock the Notifications












