அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உட்பட அனைத்துக் கல்வித்துறை அலுவலகங்களுக்கும் 'பயோமெட்ரிக்' கருவி விநியோகிக்கப்பட்டு வருவதால் வரும் 12ம் தேதிக்குள் அவற்றைப் பொருத்தி, இதுகுறித்து அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் வருகைப்பதிவு முறையை ஒழுங்குபடுத்தும் வகையில் பள்ளி, கல்வித்துறை அலுவலகங்களில் பயோமெட்ரிக் கருவி பொருத்த கடந்த 2018 அக்டோபர் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள, 7,726 அரசு, அரசு உதவிபெறும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஆதாருடன் இணைந்த பயோமெட்ரிக் கருவிகள் விநியோகிக்கப்பட்டு வருவதால், 12ம் தேதிக்குள், அவற்றைப் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, இயக்குநர் ராமேஸ்வர முருகன் இது தொடர்பாக சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளார். அதில் பயோமெட்ரிக் கருவி, 'கூரியர்' மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது. இதை பயன்படுத்தும் முறை குறித்து, வரும் 11ம் தேதிக்குள், வட்டார வாரியாக பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பள்ளிகளில் பொருத்தி, இதுகுறித்த அறிக்கையை வரும் 12ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.