மைசூரு: ஐஐடி-ஜேஇஇ தேர்வுக்கு முழுக்கை சட்டையுடன் வந்த மாணவரை தேர்வு எழுத விடாமல் மேற்பார்வையாளர்கள் அலைக்கழித்த சம்பவம் கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்துள்ளது. பின்னர் முழுக்கையை வெட்டி அரைக்கையாக மாற்றி சட்டையைப் போட்டுக் கொண்டு மாணவர் தேர்வு எழுதினார்.
நாடெங்கும் நேற்று ஐஐடி-ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு நடைபெற்றது. மைசூரிலுள்ள சாத்வித்யா கல்லூரியில் இந்தத் தேர்வுக்கான மையம் நடைபெற்றது. அப்போது தேர்வுக்கு முழுக்கை சட்டையுடன் 18 வயது நிரம்பிய மாணவர் ஒருவர் வந்தார். ஆனால் அவரை தேர்வு அறைக்குள் நுழைய மேற்பார்வையாளர்கள் அனுமதிக்கவில்லை.
தேர்வு விதிகள் அதற்கு அனுமதிக்காததால் அவரை விடமாட்டோம் என அவரை அலைக்கழித்தனர். முழுக்கை சட்டைக்குள் வைத்து மாணவர்கள் பிட் அடிப்பதால் இந்த நடைமுறையைப் பின்பற்றுவதாக அவர்கள் தெரிவித்தனர். வேறு சட்டையை மாற்றிக் கொண்டு தேர்வுக்கு வருமாறு அவர்கள் அறிவுறுத்தினர். அது தனக்கு ராசியான சட்டை என்றும் அதை மாற்ற முடியாது என்றும் அவர் அவர்களிடம் வாதம் செய்தார். ஆனால் அவர்கள் அனுமதிப்பதாக இல்லை.
மேலும் அந்த நேரத்தில் காலை 9 மணிக்கு கடைகள் திறக்கப்படவில்லை. மேலும் அன்று ஞாயிற்றுக்கிழமையும் வேறு. இதனால் அந்த மாணவர் செய்வது அறியாது விழித்தார். அவரது வீடு மைசூரிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஹெக்கடதேவனகோட்டை (ஹெ.டி. கோட்டை-முன்னாள் பிரதமர் தேவகௌடவின் சொந்த ஊர்) ஆகும். ஊருக்கு சென்று சட்டையை மாற்றிக் கொள்ளவும் நேரமில்லை. இதையடுத்து அந்த மாணவர் ஒரு சமயோசித செயலைச் செய்தார். பக்கத்திலுள்ள கடைக்குச சென்ற அவர் கத்தரிக்கோலை வாங்கி வந்து தனது சட்டையின் கையை வெட்டி அரைக்கையாக மாற்றினார். பின்னர் அந்த சட்டையைப் போட்டுக் கொண்டு அவர் தேர்வு எழுதினார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.