சென்னை: கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி(கேஐஐடி) பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல். தாத்து தொடங்கிவைத்தார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அமைந்துள்து கேஐஐடி பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழக வளாகத்தில் உலக சட்டப் படிப்பு என்ற தலைமையிலான சர்வதேச கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைக்க இருந்தார். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் பிரணாப் கலந்துகொள்வது கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த சர்வதேச கருத்தரங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி எச்.எல். தாத்து தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பிரணாபின் உரை வாசிக்கப்பட்டது.
விழாவில் தலைமை நீதிபதி தாத்து தொடக்க உரையாற்றி பேசியதாவது: தற்போது நாம் வாழும் இந்தச் சூழ்நிலையில் சமுதாயம் என்பது சிக்கலான விஷயங்களில் பெருகிச் செல்கிறது. சட்ட நடைமுறையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் நமது சமுதாய வாழ்வில் பிரதிபலிக்கின்றன. உலகத் தரத்தில் இந்தியாவிலிருந்து நிபுணர்களையும், கல்வியாளர்களையும் நாம் உருவாக்கவேண்டும்.
அப்போதுதான் உலக அளவில் நாம் போட்டியிட முடியும். இதைப் போலவே சட்டக் கல்வியிலும் நாம் சிறந்து விளங்க வேண்டும். அதற்காக இங்குள்ள பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரத்தில் மாணவர்களை உருவாக்க வேண்டும்.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் சர்வதேச சட்டம் சம்பந்தமான படிப்புகளைப் பயில ஒப்பந்தங்கள் செய்யப்படவேண்டும். மேலும் சட்டப்படிப்பு தொடர்பான முகாம்களையும் நடத்தவேண்டும்.
மாணவர், ஆசிரியர்களை இங்கிருந்து வெளிநாட்டுக்கும், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கும் கொண்டு வரப்படவேண்டும் என்றார் அவர்.
நிறைவு விழா நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்த கௌடா, கேஐஐடி பல்கலை. நிறுவனர் அச்சுதா சமந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்கில் நாடெங்கிலிருந்து 1,100 வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.