இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொருவரும், தங்கள் வாழ் நாளில் உச்சத்தை எட்டும்போது, அவர்கள் மறக்காமல் குறிப்பிடும் நபர்களின் வரிசையில் எப்போதும் ஒரு ஆசிரியர் இடம்பெறுவார்.
அவர் யார் என கேட்டால், அவரின் அளப்பரிய அர்ப்பணிப்பே, என் நிலை உயர காரணமாக இருந்தார் என, பூரிப்புடன் வெளிப்படுத்துவார்கள். அதனால்தான் தாய், தந்தையை காட்டிலும், குருவிற்கு பொறுப்பு அதிகம் என்பர். ஆகையால் தான், கல்வி கற்று தரும் ஆசிரியரின் சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு.

கல்வியை கடமையாக பார்க்கும் ஆசிரியர்கள் மத்தியில், அதை அர்ப்பணிப்போடு மேற்கொண்டு ஒரு தலைமுறையின் வளர்ச்சிக்கு வித்திடும் ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால், ஆசிரியர்கள் மீதான மாணவர்கள் பார்வை, ஒழுக்கம் சார்ந்த நிகழ்வுகளால் ஆசிரியர்கள் மீதான பார்வையால், ஆசிரியர் என்ற சமூகம் மீது மதிப்பு இழந்து வருகிறது.
இருப்பினும், அவ்வவ்போது ஒரு சில ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, அவர்கள் முன்னெடுக்கும் செயல், உள்ளூர் மட்டுமின்றி நாடு முழுவதும் பேசு பொருளாக மாறுகிறது.
அந்தவரிசையில், செம்பொன்குடி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற பெயர், பட்டித்தொட்டி எல்லாம் பேசப்படுகிறது.அது யார், அவர் செய்த செயல் என்ன, எங்கிருக்கிறது அந்த செம்பொன்குடி கிராமம் என்பதை அறிந்து கொள்வோம்? குட்டீஸ்
ராமநாதபுரம் மாவட்டம், செம்பொன் குடி கிராமத்தில், கடந்த 1982 ஜூன் 2ல் காமாட்சி- பெத்தாயி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் கே.ராமச்சந்திரன்.
அண்ணன், அக்கா இருவர் உடன் பிறந்தவர்கள். ராமச்சந்திரனுக்கு, நாகலட்சுமி என்ற மனைவியும், இரு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
விவசாயி குடும்பமான அவர் தொடக்கப் பள்ளியை, அவரது சொந்த ஊரான செம்பொன்குடி தொடக்கப் பள்ளியிலேயே படித்துள்ளார்.
திருவரங்கத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், 10,12ஆம் வகுப்பு படித்துள்ளார்.
படித்த முடித்த பிறகு, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிக்க முயன்ற நிலையில், அவருக்கு சீட் கிடைக்கவில்லை.
டீக்கடையில் பணி
அந்த வருடம் (1999-2000) குடும்ப வறுமையால், மதுரையில் டீக்கடையில் வேலை செய்துள்ளார். பின்பு 2000-2002 வரை, மஞ்சூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சியை முடித்தார். படிப்புக்கு ஏற்ற பணி கிடைக்காததால், 2002-2005 வரை திருப்பூரில் வேலை செய்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள எம்.வி பட்டினத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக, 2005ல் பணியில் சேர்ந்தார்.
பணி செய்து கொண்டு, பிஎஸ்சி கணிதம், பி எட், எம்எஸ்சி., கணிதம் ஆகிய பட்டப்படிப்புகளை படித்து முடித்தார்.
ஓயாத கல்வி தேடல்
இந்திரா காந்தி நேஷனல் ஓபன் யூனிவர்சிட்டியில், பி.எட்., படித்து முடித்தார். பிஎஸ்சி மற்றும் எம் எஸ் சி படிப்பினை பரமக்குடி மாலை நேர கல்லூரியில் படித்து முடித்தார்.
பிறகு 2006ல் போகலூர் ஒன்றியம் செவ்வூர் அரசு தொடக்கப் பள்ளியில் பணி மாறுதல் செய்யப்பட்டு, 2008ல் போகலூர் ஒன்றியம் கீழாம்பல் அரசு தொடக்கப்பள்ளியில் பணி மாறுதல் செய்யப்பட்டு, தற்போது வரை அப்பள்ளியில் பணி செய்து வருகிறார்.

தந்தை படித்த பள்ளியில் மகன்
ராமசந்திரன் மகனும், தந்தை படித்த பள்ளியான செம்பொன்குடி அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறார்.
இவருடைய அக்கா முத்துலட்சுமிக்கு, அவரது பெயரை கூட முழுமையாக எழுத தெரியாது என்பது தான் உண்மை; அதற்காகவே ஏழை எளிய மக்களை படிப்பின் மூலம் மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவே, பாடுபட்டு வருவதாகவும் ராமச்சந்திரன் வேட்கை தீயுடன் தெரிவிக்கிறார்.
சம்பளத்தில் 80 சதவீதம்
இவர் தாம் பணிபுரிந்து வரக்கூடிய கீழாம்பல் பள்ளியில் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொண்டிருக்கிறார். தான் வாங்கக்கூடிய சம்பளத்தில் 70 முதல் 80 சதவீதம் பள்ளிக்கும், மாணவர்களுக்காகவே செலவழித்துக் கொண்டு வருகிறார்.
தினமும் சீருடையில் வருகை
அது மட்டுமல்லாமல் லேப்டாப், கம்ப்யூட்டர், ஸ்மார்ட் கிளாஸ், மாணவர்களுக்கு கைப்பேசி உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும், தன் சொந்த செலவில் வாங்கி கொடுத்து படிக்க வைத்து வருகிறார்.
மாணவர்கள் எல்லோரும் சஞ்சலப்படக் கூடாது என்பதற்காக மாணவர்கள் அணியக்கூடிய யூனிஃபார்மை, தானும் அணிந்து பள்ளிக்கு வருகிறார்.
அதுமட்டுமின்றி, தற்போது கிடைத்துள்ள தேசிய நல்லாசிரியர் விருதினை, அரசு பள்ளி மாணவர்களுக்காகவே சமர்ப்பிப்பதாகவும் ஆனந்தத்துடன் தெரிவித்தார்.
பள்ளி சீருடை அணிந்து விருது பெற திட்டம்
ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ல் தான் பெற்று கொள்ளவிருக்கும் நல்லாசிரியர் விருதை, மாணவர்கள் அணிந்து வரும் பள்ளி சீருடையுன் வாங்குவேன் என, பெரு மகிழ்ச்சியுடன் கூறி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications












