சென்னை : தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 முதன்னை எழுத்து தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன. இதில் சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில் படித்த 109 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 1 பதவிகள் அடங்கிய பணிகளில் 19 துணை கலெக்டர்கள், 26, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் (டி.எஸ்.பி) 21 வணிகவரித்துறை உதவி ஆணையாளர்கள் 8 மாவட்ட பதிவாளர்கள் ஆகிய 4 பதவிகளுக்கான 74 பணியிடங்களுக்கு கடந்த 29.07.2016, 30.07.2016, 31.07.2016 ஆகிய 3 நாட்களில் முதன்மை எழுத்து தேர்வு நடந்தது.
இந்த தேர்வில் 2,926 பேர் கலந்து கொண்டனர். தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அந்த பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்காக தற்காலிகமாக 148 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
சானறிதழ் சரிப்பார்ப்பு
இந்த விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைத்தளம் www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிப்பார்ப்பு ஜூன் 5ந் தேதி முதல் 9ந் தேதி வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த 148 பேர்களும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதிலிருந்துதான் 74 பணியிடங்களுக்கும் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தமிழக அரசின் தேர்வாணையத்தின் தலைவர் பதவி தவிர மற்ற உறுப்பினர்கள் பதவி 3 மாதங்களாக காலியாக இருந்தது.
இலவச பயிற்சி
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு டாக்டர் மு.ராஜாராம், பி.கிருஷ்ணகுமார், ஏ.சுப்பிரமணியன், ஏ.வி. பாலுசாமி, வி.சுப்பையா ஆகிய 5 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அனைத்து தேர்வு பணிகளும் விரைவாக முடிக்கப்பட்டு, குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் சப்இன்ஸ்பெக்ட்ர் மற்றும் பல பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. தமிழ அரசின் தேர்வாணையம் நடத்திய குரூப் 1க்கான முதன்மை எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற 148 பேர்களில் 109 மாணவ மாணவிகள் சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில் இலவசமாக பயிற்சி பெற்றவர்கள் இதில் 45 பேர் ஆண்கள் 64 பேர் பெண்கள் ஆவர்.
நேர்முகத் தேர்வு
இவர்களில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை பிரிவினர், பொதுப்பிரிவினர் எல்லோரும் இருக்கிறார்கள். முதன்மை தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மனித நேய மையத்தில் நேர்முகத் தேர்வுக்காக இலவசபயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளன.
முன்பதிவு
இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் முதன்மை எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் தாங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் நுழைவுச்சீட்டு ஆசியவற்றுடன் இன்று (சனிக்கிழமை) முதல் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்கான அனைத்து பயிற்சிகளும், வசதிகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி மிகவும் அனுபவம் பெற்றவர்களால் உயர்தரத்தில் நடத்தப்படும் என்று இந்த மையத்தின் மாநில தேர்வுகள் ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












