சென்னை: பிளஸ்-2 மாணவர்கள் இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழை அந்தந்த பள்ளிகளிலேயே பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்புச் செய்துள்ளது.
இதேபோல தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் இயக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. உயர் படிப்புகளில் சேரும் மாணவர்களின் நலன் கருதி முதல் முறையாக பிளஸ் 2 மாணவர்களுக்கு இந்த ஆண்டு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த மதிப்பெண் சான்றிதழ் 90 நாள்களுக்குச் செல்லுபடியாகும் என்று அறிவிப்புச் செய்யப்பட்டது.
இந்த நிலையில் விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீடு ஆகியவை முடிவடைந்துவிட்டன. இதைத் தொடர்ந்து பிளஸ்-2 தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. அவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி தலைமை ஆசிரியரிடமிருந்து அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெறலாம்.
வேலைவாய்ப்புக்கும் பதிவு செய்யலாம்
பிளஸ் 2 மாணவர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றதும் பள்ளியிலேயே ஆன்-லைன் வழியாக வேலைவாய்ப்புக்கும் பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடக்கி வைக்கிறார்.
தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்தத் திட்டம் இன்று முதல் தொடங்குகிறது.