சென்னை: மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரத்திலிருந்து பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "2015-2015ம் கல்வி ஆண்டில் பள்ளிக் கூடங்கள் அனைத்தும் ஜூன் மாதம் 1-ந்தேதி திறக்கின்றன. பள்ளிக்கூடம் திறக்கும் முன்பே அவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
ஏற்கனவே பள்ளிக்கூடம் திறந்த அன்றுதான் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வந்தன. வருகிற கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 படிக்கப்போகும் மாணவர்களுக்கு முன்கூட்டியே பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அரசு வழங்கும் விலை இல்லாத 14 வித பொருட்களும் மாணவர்களுக்கு தேவைப்படும்போது உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல வருகிற கல்வி ஆண்டிலும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்," என்றார்.