கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடியாக வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ள சூழலில் இதுகுறித்து முக்கிய அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
ஒன்றரை ஆண்டுக்குப் பின்
கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. தொடர்ந்து, சமீபத்தில் முதல் அலை ஓய்ந்த பிறகு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் இரண்டாவது அலை தீவிரமடைந்த நிலையில், அவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படாமல் ஆன்லைன் மூலம் கற்பிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா
இந்த நிலையில், பள்ளிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் செல்லாததால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் தொற்றின் அச்சம் உள்ளிட்டவற்றின் காரணமாக கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் மாணவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. மேலும், பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கும் கொரோனா தொற்று பரவியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பள்ளிகளை திறப்பதில் சிரமம்
இதனிடையே, தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புகளும் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில், உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய விஞ்ஞானி டாக்டர் சவுமியா சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில், குழந்தைகளுக்கு இயற்கையாகவே நிறைய நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பதால் பள்ளிகள் திறப்பதில் எந்த சிரமமும் இருக்காது. பள்ளிகள் மூலம் கொரோனா பரவும் என்பது தவறான கருத்து என்றனர்.
முதலமைச்சர் முடிவு
இதையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பரிந்துரையின் பேரில் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். இந்த நிலையில், நவம்பர் 4ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை என்பதால் தீபாவளி கழித்து மேற்கண்ட வகுப்புகளுக்குப் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
பள்ளிகள் திறப்பதில் மாற்றம்
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், நவம்பர் 1-ஆம் தேதி 1-ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை எனவும், திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மாணவர்கள் கவனத்திற்கு!
மேலும், நவம்பர் 1ம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 1-ம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.