தமிழகத்தில் வரும் நவம்பர் மாதத்திலிருந்து பள்ளிகள் திறக்கப்படும் என சமூகவலைதங்களில் தகவல் பரவிய நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அதற்கான விளத்தை வெளியிட்டுள்ளார்.
கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் எப்போது கல்வி வளாகங்கள் திறக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் உள்ளது.
11 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு நிர்ணயிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இப்போதைக்குப் பள்ளிகளை திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் எனவும், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தற்போதுள்ள சூழலில் பள்ளிகளைத் திறக்க வாய்ப்பில்லை. மீண்டும் பள்ளிகளை எப்போது திறக்கப்படும் என்ற முடிவுகள் எடுக்கப்படவில்லை. கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்த பிறகு பொது மக்களிடம் கருத்து கேட்டு பின் பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.