புதுடில்லி: கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வந்த பின்பு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த பட்டியலை தயாரிக்கும் பணியில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஈடுபட்ட வருகிறது.
கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச், 16-லிருந்து, நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் முதல் துவங்கலாம் என்றும், வகுப்புகளைச் செப்டம்பரிலிருந்து துவங்கலாம் எனவும் பல்கலை மானியக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இதனிடையே, பள்ளிகளில் வகுப்புகள் துவங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்த பின், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த பட்டியலை, மத்திய மனிதவள அமைச்சகத்தின் பரிந்துரையின்படி, பள்ளி கல்வித் துறையினர், பல்கலைக் கழக மானியக் குழுவினர் தயாரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.