சென்னை: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 2 என அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, பிள்ளைகளுக்கான புதிய எழுதுபொருட்களை வாங்க கடைகளில் அலைமோதுகிறது பெற்றோர் கூட்டம்.
2014-2015-ம் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த கோடை விடுமுறை நாளை மறுநாளுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. இதையடுத்து ஜூன் 1-ந் தேதி (திங்கட்கிழமை) 2015-2016-ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
பெரும்பாலான பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளன.
புதிய எழுது பொருட்கள்
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் புத்துணர்வுடனும் மகிழ்ச்சியுடனும் செல்ல வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு புதிய சீருடை, புத்தகப் பைகள், பேனா, எழுதுபொருள் பெட்டி, தண்ணீர் பாட்டில் போன்றவற்றை வாங்க வேண்டியுள்ளது.
கடைகளில் குவியும் கூட்டம்
கடந்த சில நாட்களாக இவற்றை வாங்க ஒரே நேரத்தில் பெற்றோர்கள் கடைகளுக்குச் சென்ற வண்ணம் உள்ளனர். குறிப்பாக சென்னை தி நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் போன்ற கடைகளில் குவியும் கூட்டம் திணறடிக்கிறது.
செம பிஸினஸ்
பேனாக்கள், காலணிகள், தண்ணீர் பாட்டில்கள், ஜாமென்டரி பாக்ஸ் போன்றவற்றை மாணவர்களின் மனதுக்குப் பிடித்த வடிவம் மற்றும் வண்ணங்களில் தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளதால், வியாபாரம் படு சூடாக நடக்கிறது.
அரசுப் பள்ளிகளில்..
அரசு பள்ளிகளில் இந்த கல்வி உபகரணங்கள் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், நோட்டுகளுடன் இலவசமாகவே வழங்கப்படுகிறது. எனவே தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்துள்ள பெற்றோர் இதுபோன்ற கல்வி உபகரணங்களை வாங்க முண்டியடிக்கின்றனர்.
இப்படியும் ஒரு பிஸினஸ்
சில தனியார் பள்ளிகள், இந்த உபகரணங்களுக்கும் சேர்த்து பணம் வசூலித்துக் கொண்டு, சுமாரான தரத்தில் மாணவர்களுக்கு பொருட்களைத் தரும் போக்கும் தொடர்கிறது.