சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் செண்டம் காட்டுவதற்காக 9ம் வகுப்பிலேயே மாணவர்களை தரம் பிரிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி படிக்கும் மாணவர்கள் செண்டம் எடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளும் செண்டம் காட்ட வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக் கல்வித் துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 60 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி சதவீதம் காடிய பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கு மெமோ கொடுத்து விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை எச்சரித்து வருகிறது.
அதனால் காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, திருப்பத் தேர்வுகளில் மதிப்பெண் குறைவாக எடுக்கும் மாணவர்களைக் கணக்கெடுத்து, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது, மாலை நேர வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தேர்ச்சி சதவீதம் குறையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை நெருக்கடியை கொடுத்து வருகிறது. இதனால் தலைமை ஆசிரியர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், எஸ்எஸ்எல்சி தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி வீதம் காட்ட வேண்டும் என்றால், தற்போது 9ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் சராசரியாக படிக்கும் மாணவர்கள், குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் ஆகியோரை ஒரு பிரிவாகவும், 60 மதிப்பெண்களுக்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை ஒரு பிரிவாகவும் பிரித்து தரமான மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், சரியாக படிக்காத மாணவர்களை 9ம் வகுப்பிலேயே நிறுத்தி வைத்து அவர்களை மீண்டும் ஓராண்டு அதே வகுப்பில் படிக்க வைத்து பின்னர் எஸ்எஸ்எல்சி வகுப்புக்கு அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதை நடப்பு கல்வி ஆண்டில் இருந்தே செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு 9ம் வகுப்பில் சரியாக படிக்காத மாணவர்களை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு அதிகம் பேர் 9ம் வகுப்பில் பெயில் ஆவார்கள் என்று தெரிகிறது.