சென்னை: 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் என்னென்ன செய்யப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அவர்கள் கூறியதாவது:
நாளை 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை தமிழகம் முழுவதும் ஒன்பதரை லட்சம் மாணவ மாணவியர்கள் எழுத உள்ளார்கள். அதற்காக 2427 தேர்வு மையைங்கள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
தேர்வு நடைபெறுவதற்கு மூன்று நாளைக்கு முன்னதாகவே அவரவருக்கு நியமிக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு சென்று அங்கு அனைத்து வசதிகளும் சரியாக உள்ளதா என சரிப்பார்க்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் அனைத்துப் பள்ளிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு இருக்கை வசதி மற்றும் ஃபேன் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
அந்தந்த மாவட்ட மையத்திற்கு வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள்கள் கண்காணிப்பு அலுவலகத்தில் வினாத்தாள் கட்டுக் காப்பாளர்களின் பாதுகாப்போடு வைக்கப்பட்டிருக்கின்றன. தேர்வு நடைபெறும் நாள் அன்று தேர்வுக் கூடங்களுக்கு அனைத்து விதப் பாதுகாப்போடும் வினாத்தாள்கள் தேர்வு நடைபெறும் நேரத்திற்கு முன்னதாகவே உரிய நேரத்தில் அனுப்பி வைக்கப்படும். அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும்செய்யப்பட்டுள்ளன.
மாணவர்கள் தேர்வு அறைக்குச்செல்லும் போது செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பார்த்து எழுதுதல் மற்றும் எந்தவித முறைகேடான செயல்களிலும் ஈடுபடக் கூடாது என்பதற்காக பறக்கும் படையினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.