சென்னை : பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் பல மாற்றங்களை கொண்டு வந்த தமிழக பள்ளிக் கல்வித்துறை பிளஸ்2 பாடத்திலும் மாற்றம் கொண்டு வர உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சமீபகாலமாக பல புதிய மாற்றங்களை கல்வித்துறையில் அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக 12ம் வகுப்பிலும் பல மாற்றம் ஏற்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
தேர்வு மதிப்பெண்கள் மற்றும் தேர்வு நேரத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாற்றங்களும் மாணவ மாணவியருக்கு பயனுள்ளதாகவும், அவர்களை நவீன உலகத்திற்கு ஏற்ப உயர்த்துவதாகவும் அமைந்தால் நலம் பயக்கும் என ஒருசாரார் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதன்படி பிளஸ்2 பொதுத் தேர்வில் பாடவாரியான மொத்த மதிப்பெண் 200ல் இருந்து 100 ஆக குறைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தேர்வு நேரத்தையும் 3 மணி நேரத்திலிருந்து 2.30 மணி நேரமாக குறைக்கவும் பள்ளிகல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
11ம் வகுப்பு தேர்வு 100 மதிப்பெண்களுக்கும் 12ம் வகுப்பு தேர்வு 100 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படும். பின்பு இரண்டு வகுப்புகளுக்கும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.