சென்னை: அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை செம்மொழித் தமிழ் பட்ட வகுப்பு தொடங்கும் போது அதில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஊக்கத் தொகையை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கும் என்று அதன் பதிவாளர் மு. முத்துவேலு தெரிவித்துள்ளார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழியல் துறையும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து செவ்வியல் இலக்கியங்களின் அடிக்கருத்தும், காட்சிப்படுத்துதலும் என்ற தலைப்பில் 10 நாட்கள் கொண்ட பயிலரங்தை நடத்தின.
இதன் நிறைவு விழா நிகழ்வு கடந்த 1ம் தேதி நடந்தது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் மு.முத்துவேலு கூறியதாவது:
முதுநிலை பட்டப்படிப்பில் தமிழில் முதல் 5 இடங்களை பெறும் மாணவர்களுக்கு சிறப்பு உதவித் தொகை வழங்க செம்மொழி மத்திய நிறுவனம் நடவடிக்கை எடுக்கும். அண்ணாமலை பல்கலைக் கழக தமிழியல் துறையின் செயல்பாடுகளுக்கு இனிவரும் காலங்களில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடர்ந்து தனது ஆதரவை அளிக்கும். பழந்தமிழ் இலக்கியங்களின் சிறப்புகளையும் பெருமைகளையும் வெளிக்கொண்டு வரும் வகையில் பயிலரங்கை அமைத்து அதன் மூலம் கட்டுரை தொகுப்பை வெளியிடுவது அண்ணாமலைப் பல்கலைக் கழக தமிழியல் துறையின் சாதனையாக உள்ளது என்றார்.