சென்னை: வெளிநாட்டிலுள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், கல்வி நிபுணர்கள் இந்தியாவுக்கு வந்து மாணவர்களுக்கு பாடங்களை போதிக்கவுள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதற்காக வெளிநாட்டு பல்கலைக்கழக மசோதாவைத் தாக்கல் செய்யவுள்ளது மத்திய அரசு.
இதற்கான பணிகளில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த மசோதா அமலுக்கு வரும்போது வெளிநாடுகளிலுள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்வி நிபுணர்கள் இந்தியாவுக்கு வந்து பாடங்களை நடத்துவர்.
வெளிநாடுகளில் உள்ள பிரபலமான 200 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள் இந்தியாவுக்கு வருவர். பிரபல கல்வியாளர்கள் மொழியியல் வல்லுநர் டீன் ஷுல்மன், அமெரிக்காவைச் சேர்ந்த தத்துவ இயல் பேராசிரியர் ஜுடித் பட்லர் உள்ளிட்டோர் இந்தியாவுக்கு வரவுள்ளனர்.
இவர்கள் டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாடங்களைக் கற்றுத் தரவுள்ளனர். வரும் நவம்பர் முதல் இது அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மனித வள மேப்பாட்டுத்துறையின் கல்வி நிறுவனங்களுக்கு இடையே உலக அளவிலான ஒப்பந்தங்களை முன்னெடுத்துச் செல்லுதல் என்ற திட்டத்தின்படி இந்த முறை செயல்படுத்தப்படவுள்ளது.