இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளில் 6.84 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவை கூட்டத் தொடரில் வேலையின்மை குறித்தான கேள்விக்கு மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளார். அதில்,
மொத்தம் 38.02 லட்சம் பணியிடங்கள்
மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் 38.02 லட்சம் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் கடந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி வரையில் 31.18 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. மேலும், 6.84 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணிநிறைவு, இறப்பு, பதவியுயர்வு உள்ளிட்டவை காரணமாகப் பணியிடங்கள் காலியாக உள்ளன.
தேர்வாணையத் தேர்வுகள்
பல்வேறு அமைச்சகங்களிலும், துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை அந்தந்த தறை சம்பந்தப்பட்ட தேர்வாணையம் தான் தேர்வுகள் நடத்தி பணியிடத்தினை நிரப்புகின்றன.
மத்திய பணியாளர் தேர்வு வாரியம்
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள 1.03 லட்சம் காலிப் பணியிடங்களை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்எஸ்சி) 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வேத் துறையில் உள்ள 1.56 லட்சம் காலிப் பணியிடங்களை ரயில்வே வாரியம் 2 ஆண்டுகளில் நிரப்பவுள்ளது.
ஊழல் புகார்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு எதிராக சுமார் 43,946 ஊழல் புகார்கள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 41,755 புகார்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணிநீக்கம்
கடந்த 5 ஆண்டுகளில், ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான 2 ஐஏஎஸ் அதிகாரிகள், 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 23 ஐஏஎஸ் அதிகாரிகள், 4 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.