புதுடெல்லி: திருநங்கையர்கள் குறித்து உச்சநீதிமன்றம் வரையறை செய்யாத நிலையில் குடிமைப்பணி தேர்வு எழுதுவதற்கான தகுதியில் அவர்களை மூன்றாம் பால் இனத்தவராக சேர்க்க இயலாது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
திருநங்கையர்களை மூன்றாம் பாலினத்தவராக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் வாக்காளர் பட்டியல் முதல் பல்வேறு அரசு ஆவணங்களில் அவர்களுக்கு மூன்றாம் பால் இனத்தவர் என அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குடிமைப்பணி முதன்மைத் தேர்வு, வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தின் பாலினப் பிரிவில் "மூன்றாம் பாலினத்தவர்' என்ற பிரிவு இல்லை என்பதால், திருநங்கையர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டள்ளதாக கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு(பி.ஐ.எல்.) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடிமைப் பணி தேர்வு எழுத திருநங்கையர்களை அனுமதிக்கவேண்டும் அல்லது மூன்றாம் பாலினத்தவர் என்ற பிரிவை தேர்வுக்கான இணைய விண்ணப்பத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
மனுவை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் முக்தா குப்தா, பி.எஸ்.தேஜி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நேற்று விசாரித்தது. அப்போது, யுபிஎஸ்சி மற்றும் மத்திய அரசின் பணியாளர் நலத்துறை சார்பில் உறுதிமொழி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதில், திருநங்கையர் யார் என்பதற்கான விளக்கத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டால், இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் அவர்களுக்கு கிடைப்பதற்கான விதிகள் உருவாக்கப்படும் என பணியாளர் நலத் துறை கூறியது. திருநங்கையர்கள் யார் யார் என வரையறை செய்துவிட்டால் அதற்கேற்ப விதிகளை உருவாக்க வழிவகை செய்யப்படும் என்று பணியாளர் நலத்துறை தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து திருநங்கையர் தொடர்பான தீர்ப்பில் விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு, கோடைகால விடுமுறைக்குப் பிறகு விசாரணைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோத்திஸ், அரவானி, ஜோகப்பாஸ் உள்ளிட்டவர்கள்தான் திருநங்கையர் என மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசின் மனு மீது உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்த பிறகு இந்த வழக்கை விசாரிப்பதாகத் தெரிவித்தனர்.