இந்திய இராணுவத்தினரின் குழந்தைகள் மட்டுமே படிக்கும் சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளையும் சேர்க்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
நாடு முழுவதிலும் செயல்பட்டு வரும் சைனிக் என்னும் இராணுவப் பள்ளி 1961-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதாகும். தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் இப்பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது.
இதனிடையே, இப்பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மாணவிகளுக்கும் சேர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவத்தில் ஆண்களுக்கு இணையான பணியிடங்களில் பெண் அதிகாரிகளும் பணியாற்றி வரும் நிலையில் சைனிக் பள்ளிகளில் மாணவிகள் சேர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சோதனை அடிப்படையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் மிசோரத்தில் இயங்கிவரும் சைனிக் பள்ளியில் 6 பெண் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு பெருத்த வரவேற்பு கிடைத்த நிலையில் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 33 சைனிக் பள்ளிகளிலும் 12ம் வகுப்பு வரையில் இனி பெண் குழந்தைகளைச் சேர்க்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சைனிக் பள்ளிகளில் ஆண் குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்பட்டு வருகின்றனர். 2 ஆண்டுக்கு முன் மிசோரமில் உள்ள சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளைச் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டது.
அங்கு கிடைத்த பலனை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை நாடு முழுவதும் கொண்டு செல்ல முடிவானது. எனவே, சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகளைச் சேர்க்க பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, வரும் 2021-2022-ம் கல்வி ஆண்டில் சைனிக் பள்ளிகளில் பெண் குழந்தைகள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.